Hot News
Home » செய்திகள் » பிரபாகரனின் சிலையை இரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு

பிரபாகரனின் சிலையை இரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு

தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிலை இரவோடு இரவாக தமிழக அரசால் அகற்றப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ம் திகதி கிராமத்தினர் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.

கோயிலின் தெற்கு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு குதிரை சிலைகளை வடிவமைத்தனர்.

அதில், ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர்.

தன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்து தாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம் என்று கிராமத்தினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த தகவல் உளவுத்துறையினரால் மேலிடத்திற்கு சென்றதால் நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு சென்ற காவல்துறையினர், பிரபாகரனின் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.

காவல்துறையினரின் அதிரடியால் கிராம மக்கள் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றியுள்ளனர்.

கோவில் திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TELO Media Team 1