யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு உளவியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை, இலங்கையில் தமிழர்களின் உண்மையாக நிலைமை என்ன என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு எனத் குறிப்பிட்டுள்ளார் சிரேஸ்ட சட்டத்தரணியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான என்.சிறிகாந்தா.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் சகோதரரின் காணியில் நேற்று பாதுகாப்பு தரப்பினர் நிலத்தை அகழ்ந்து சோதனை நடத்தியிருந்தனர். அத்துடன், சிறிதரன் எம்.பியின் வீட்டையும் சோதனையிட முயன்றனர்.
இந்த நடவடிக்கையை வமையாகக் கண்டித்து ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார் ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா.
அவரது அறிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு உளவியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை, இலங்கையில் தமிழர்களின் உண்மையாக நிலைமை என்ன என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.
சிறப்புரிமை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமையென்றால், சாதாரண தமிழ் மக்களின் கதியென்னவென்பதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
இலங்கையில் எந்த சிங்கள தலைவர் ஜனாதிபதியாகவோ, அல்லது பிரதமராகவோ இருந்தாலும், தமிழர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.
இனியும் இதுவே நிலைமையென்று துணிந்து கூற முடியும்.
எம் இனத்தின் தலைவிதி இதுதான் என எம்மை நாமே நொந்து கொண்டிருக்காமல், எமது உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான வழிவகை என்னவென்பதை சிந்திக்க அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு முதற் படியாக ஒத்துழைப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.