முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலமைச்சர்கள் யார் என்பதை அவர் தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டங்களை உருவாக்கி வந்த போதிலும் இறுதியின் ஆளும் கூட்டணி கட்சித் தலைவர்களில் கூட்டத்தில் அந்த தேர்தலை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பது எனவும் இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ச, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த வேண்டிய வேட்பாளர்கள் யார், ஆளும் கூட்டணி கட்சியில் உள்ள கட்சிளுக்கு வழங்க வேண்டிய வேட்புமனுக்களின் எண்ணிக்கை, முதலமைச்சர்களாக யார் பதவி வகிக்க வேண்டும் என்பன குறித்து பசில் ராஜபக்ச உத்தியோகபூர்வமற்ற வகையில் இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் கட்டாயம் விரைவில் ஒரு தினத்தில் மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.