Hot News
Home » செய்திகள் » சுதந்திரமாக நடமாடும் கொலைகாரக் கும்பல்; நீதி கிடைப்பது எப்போது?

சுதந்திரமாக நடமாடும் கொலைகாரக் கும்பல்; நீதி கிடைப்பது எப்போது?

லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி உண்மையை மக்களிடையே வெளிக்கொணர்ந்த மனிதநேயமிக்க ஊடகவியலாளராவர்.

அவரை நாம் இழந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

The Sunday Leader பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் துச்சமென எண்ணி சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும் மோசடிகளையும் மக்களுக்கு துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார்.

எவராலும் நெருங்க முடியாத தகவல்களை மிக சாதுரியமாக அண்மிக்கும் ஆளுமையும் திறனும் கொண்ட அவர் அதிசிறந்த ஆய்வுக்கட்டுரை ஆசியராக பல மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பல தடவைகள் உயிர் அச்சறுத்தலை அவர் எதிர்கொண்டார்.

இறுதியாக 2009 ஜனவரி 8 ஆம் திகதி முற்பகல் 10.25 அளவில் லசந்தவின் உயிர் குழுவொன்றினால் பறிக்கப்பட்டது.

லசந்த விக்ரமதுங்கவின் தொழிற்தளத்திற்கு பயணிக்கும் வழியில் இரத்மலானை – அத்திட்டிய வீதியில் வழிமறித்த ஆயுதக் குழுவொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது லசந்தவிடம் பேனாவும், குறிப்பேடும் மாத்திரமே இருந்தன.

சர்வதேச ரீதியில் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி முன்னெடுத்த பயணத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னரும் International Press Institute World Press Freedom Heroes விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை மௌனிக்க செய்த கொலைக் கும்பல் சுதந்திரமாக நடமாடும் நிலையில், அவரது மரணத்தின் ஊடாக அரசாங்கத்தை மாற்றி ஆட்சிக்கு வந்த தரப்பினரும் காலம் கடத்தும் செயற்பாட்டையே பின்பற்றினர்.

நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்தவின் புகழுடல் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கவில்லை.

லசந்தவின் உயிர் பறிக்கப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்பு தெபானம MTV/MBC கலையகத்தின் பிரதான கட்டுப்பாட்டறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

மகிழ்ச்சியான தருணங்களை விட துன்பங்களின் போது நெருக்கமாக இருந்த லசந்த விக்ரமதுங்க தெபான கலையகத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் வருகை தந்திருந்தார்.

மிகவும் திட்டமிடப்பட்ட வகையில், 2009 ஜனவரி 6 ஆம் திகதி அதிகாலை, அப்போது அதிநவீன வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டிருந்த தெபானம கலையத் தொகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் குண்டுத் தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டறையை தீயிட்டுக் கொளுத்தினர்.

பிரதான கலையக கட்டுப்பாட்டறையில் அதிசக்தி வாய்ந்த க்ளைமோர் குண்டுகளை பொருத்திவிட்டே அந்தக் குழு தப்பிச்சென்றது.

குண்டுத் தாக்குதல் நடத்தி எம்மை மௌனிக்கச் செய்வதே குண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் தாக்குதல் நடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் நாம் மீண்டும் எமது சகல அலைவரிசைகளினதும் ஒளிபரப்பை முன்னெடுத்தோம்.

குண்டுத்தாக்குதல் நடத்தி, தீயிட்டுக் கொளுத்தி, கொன்றழித்து உண்மையை மறைக்க முடியும் என இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் நினைக்கக்கூடும்.

குற்றவாளிகள் எப்போதும் உண்மைக்கு அஞ்சுவர்.

மக்களது ஆதரவும் உந்து சக்தியும் எம்மை சகல சந்தர்ப்பங்களிலும் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதுடன் உங்களுக்கான எமது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை.

உண்மையை மறைக்க முடியாது…
அது ஒருநாள் நிச்சயம் வெல்லும்!

TELO Admin