போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை நினைவுகூறும் தூபி அரசின் உத்தரவிற்கு அமையவே இடிக்கப்பட்டது. இதை மேற்கொண்டமை, மக்கள் கொல்லப்படுவதை எந்தளவு தூரம் அரசு ஏற்றுக்கொண்டதோ அந்தளவு தூரம் படுகொலைக்களுக்கு பொறுப்புச்சொல்லவும் முடியாது என்ற தகவலை சர்வதேசத்திற்குச் சொல்லியுள்ளது.
இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
போரின் பின்பாக உயிரிழந்தவர்களை நினைவுகூரக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தமக்கெதிரான அநீதிகளுக்கு நினைவிழந்தவர்களாக வாழவேண்டும் எனவும் அரசும் அரசாங்கமும் பல வழிகளிலும் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது.
தமிழ் மக்கள் மீது அரசு இனரீதியாக மேற்கொள்ளும் அழிப்பின் நடவடிக்கைகளுள் ஒன்றாகவே இதனைப்பார்க்கமுடியும். காரணம், அரசுடனான போரில் கொல்லப்பட்ட ஜே.பி.வி. யினருக்கு நாட்டின் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் நினைவு தூபிகள் உள்ளன. இத்தூபிகள் பற்றியோ அங்கு இடம்பெறும் நினைவுகூரல்களையோ அரச இயந்திரம் தடுப்பதில்லை. தூபிகளை இடிப்பதில்லை. காரணம், இன ரீதியிலான அணுகுமுறைகளே ஆகும்.
எமது பல்கலைக்கழகத்தில் உள்ள தூபி அழிக்கப்பட்டதன் மூலம் நினைவுகூறும் சுதந்திரத்தை மறுத்தல் என்பதற்கு மேலாக போரின் அடிப்படையிலான தடயங்கள் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
இந்த இடத்தில் மீள நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும் என்பதுடன் அழிக்கப்பட்டது என்ற ஆதாரத்தினையும் கொண்டமைந்ததாக அத்தூபி நிமிரவேண்டும். வரலாற்றில் நடக்கின்ற அநீதிகள் எல்லாம் ஆவணப்படுத்தப்படவேண்டும். போரின் பின்பானஇலங்கையின் நிலைமாறுகால நீதி இதுதான் என்பதை நல்லிணக்கம் பேசுவோர் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.