Hot News
Home » செய்திகள் » இலங்கை தொடர்பான இந்திய நிலை மாறும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தொடர்பான இந்திய நிலை மாறும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தொடர்பில் இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலகட்டம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், ஆர். சம்பந்தர் தலைமையில் டெல்லி வந்துள்ளனர்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்.அந்தக் குழுவில், இடம் பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்தார்.”இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை ஜனாதிபதி அவர்கள், இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவி்ல்லை என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கிறது.அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது. இலங்கை அரசை எவ்வளவு தூரம் நம்புவது என்ற கேள்விகள் இருக்கின்றன. அதனால், இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்’’ என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை ஜனாதிபதி அரசிடமும் தன்னிடமும் அளித்த உறுதிமொழியின்படி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அகிம்சை போராட்டம்

இலங்கை அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்று இந்தியாவும் கருதும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக, அகிம்சைப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அப்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று இந்திய அரசிடம் தாங்கள் எடுத்துரைத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

சீனாவின் செல்வாக்கு

சீனாவின் ஆதிக்கம், குறிப்பாக வடமாகாணத்தில் ராணுவ முகாம்களை நவீனப்படுத்துவதிலும், ராணுவக் குடியிருப்புக்கள் கட்ட நிதியுதவி அளிப்பதிலும் சீனா அதிக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அது இலங்கைத் தமிழர் மக்களால் ஏற்க முடியாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இதுதொடர்பில் இந்தியா ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகள் குறித்துக் கவலை வெளியிட்ட இந்தியப் பிரதமர், அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், மிக விரைவில் அதுதொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும் என்று பிரதமரிடம் சம்பந்தர் அவர்கள் உறுதியளித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.சர்வதேச ரீதியாக ஒரு சரியான அமைப்பை முன்னெடு்த்துச் செல்ல ஒரு வலுவான கட்சி தேவை. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அப்படிப்பட்ட வலுவான கட்சியாக மாற்ற சம்பந்தர் அவர்கள் நிச்சயம் பணியாற்றுவார் என்று நம்புவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

TELO Admin