தேர்தல் தொடர்பாக த.தே.கூட்டமைப்பிற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையில் சந்திப்பு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மட்டக்களப்பை தளமாகக் கொண்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தனின் வாசஸ்தலத்தில் அவரது தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவும் பா.அரியநேத்திரனும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மக்கள் நல்லாட்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் சூறா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் எம்.எம். அப்துர் ரஹ்மான் (பொறியியலாளர்), நகரசபையின் உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம் சபீல் நளீமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் பின்னர்’ தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாiஷகளும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“தமிழ்ப்பேசும் மக்களான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் எவ்விதமாகச் செயலாற்ற வேண்டும் என்பதைப்பற்றி மிக ஆழமாகப் பேசப்பட்டது. சரித்திர ரீதியாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது உரிமைகள் பேணப்பட்டு அவர்கள் உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்று கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான அபிலாiஷகளை நிறைவேற்றி அவர்கள் சுபீட்சமாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வைப்பெறுவது அந்த மக்களின் உரிமை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்விதமாக மக்களுக்கு உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படும்போது தான் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படமுடியும் என்ற கருத்தும் இந்த இலக்கை அடைவதற்காக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆதலால், இந்த இலக்கை நோக்கி நாம் உட்பட சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டியது ஒரு கட்டாயமான தேவை என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் இந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்கு தாங்கள் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயார் எனத்தெரிவித்தனர். இதேபோல் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் இந்த இலக்குகளுக்காக செயற்படுவதாக உறுதியளித்தனர்”