தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையினாலும் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு அதனுள் இருப்பவர்களுக்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லையென வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் “ரெலோ’ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.புதன்கிழமை மட்டக்களப்புக்க விஜயம் செய்த அவர் மட்டக்களப்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேட்பாளர் ஒதுக்கீட்டின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கம் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்டது சின்னத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டமைப்பை தொலைப்பதற்கான எந்த அருகதையும் உரிமையும் அதில் இருப்பவர்களுக்கு இல்லை.இது மக்களின் இரத்தத்திலும் சதையிலுமச் உருவான அமைப்பு. மக்களின் சிந்தனைக் கருவோடு நாங்கள் செயற்பட வேண்டும். நான் பெரிய நீ பெரியவன் என்று நடந்துகொண்டால் அது மக்களை பாதிக்கும் நிலைக்கே கொண்டு செல்லும்.எங்களைப் பொறுத்தவரையில் அந்த நிலைவராத வகையில் செயற்பட்டுவருகின்றோம். அதனை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருக்கு உரித்தானதல்ல. மக்கள் சக்தியைக் கொண்டது. இந்த மக்களின் சக்தியை நாங்கள் சிறிதாக கணக்கப்போடுவோமானால் அது எங்களின் தவறே தவிர மக்களின் தவறல்ல.இந்த நிலையில் எல்லோரும் நிதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வழிநடத்திச் செல்ல வேண்டிய தமது பொறுப்பினை உணர்ந்துகொண்டால் பிளவு என்ற செய்திகளுக்கு வாய்ப்பிருக்காது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.