Hot News
Home » செய்திகள் » ஆலயங்கள் தோறும் கல்விச்சாலைகள் உருவாக வேண்டும்

ஆலயங்கள் தோறும் கல்விச்சாலைகள் உருவாக வேண்டும்

ஆலயங்கள் தோறும் கல்விச்சாலைகளும் உருவாகவேண்டுமென்றும் அதனூடாக மாணவச் சமுதாயம் வளம்பெற வேண்டுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றவர்களுக்கு உதவிகளை வழங்க, தான் என்றும் தயாராகவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய அனுசரணையில், ஆலய வெளி வளாகத்தில் 27/05/2018 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிநேர கல்வி நிலையம், அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில், “ஆலயங்கள் எல்லாம் சமயப் பணிகளை மேற்கொள்வதுடன், சமூகப் பணிகளிலும் ஈடுபடவேண்டும். குறிப்பாக கல்விக்கான சேவையை அதிகளவில் வழங்க முன்வரவேண்டும். அவ்வாறு செயற்படுகின்றபோதே, எமது சமூகத்தை வளம்பெற செய்ய முடியும்” என்றார்.

ஆலயத் தலைவர் எஸ்.இராசமாணிக்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதேச சபை உறுப்பினர் த.கிறோஜன் ,ஆலய குருமார்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

TELO Media Team 1