மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் எழுபது மெட்ரிக் டொன்னுக்கும் மேற்பட்ட குப்பைகளை தவறான முறையில் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேப்பவட்டவான் பகுதியில் கொட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அனுமதியை முறையான வழியில் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாற செங்கலடி பிரதேச செயலாளரிடம் மிகவும் இரகசியமான முறையில் அனுமதி பெற்றுள்ளதுடன் செங்கலடி பிரதேச சபையில் பெறப்பட வேண்டிய அனுமதியை ஏறாவூர் பிரதேச சபையிலும் கரடியனாறு பொலிஸ் பிரிவில் பெற வேண்டிய அனுமதியை ஏறாவூர் பொலிஸிலும் முழுமையான தவறான முறையில் வைத்தியசாலை நிர்வாகம் பெற்றுள்ளது.
எனினும் இந்த நடைமுறைகள் மகிவும் முறைகேடான முறையில் நடந்திருப்பதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த வைத்தியசாலை கழிவுகள் இப்பகுதிகளில் கொட்டப் படுமாயின் பல காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று விசனம் வெளியிடப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகள் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்களா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதிர்கால விளைவுகளை கருத்தில் கொள்ளாது இதுபோன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகளை முறைகேடாக நடத்தும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.