சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஒற்றுமைப்பட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டுமென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் எமது நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
ஏறாவூரில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அரசியல் ரீதியில் பிரிந்து விட்டது என்று அர்த்தப்படும்.
2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததன்மூலம் இந்த நாடு இணைந்துவிட்டது என்று அர்த்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்ட முடிவை அறிவிக்க முடியுமானால் தேர்தலுக்கு முன்னரே வெற்றியாளரை தீர்மானிக்க முடியும். இதற்காக தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் தற்காலிகமாக தமது தனித்துவமான, அடையாள அரசியலை மறக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழர்களிடத்தில் தடுமாற்றமும் முஸ்லிம்கள் ஒரே வேட்பாளருக்குத்;தான் வாக்களிப்பார்கள் என்ற ஊகமும் சிறுபான்மைச் சமூகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் தரமாட்டாது. முஸ்லிம் அரசியலிலுள்ள பயமும் கோபமும் தணிக்கப்படாதவரை முஸ்லிம்களை அரசியல்ரீதியில் திருப்திப்படுத்த முடியாது.
யாரும் சொல்லித்தருகின்ற உணர்ச்சிவசப்படுத்தப்படுகின்ற மற்றும் கோரிக்கை அரசியலிலிருந்தும் விடுபட்டு புத்திசாலித்தனமான திடகாத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ் முஸ்லிம் புதிய தலைமுறைகள் முன்வர வேண்டும்.
இதேபோன்றுதான் கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒப்பந்தங்கள் செய்ததாக கூறப்பட்டது. இதுஅரசியலில் சகஜமாகிவிட்டது. நீண்டகாலமாக கோரிக்கைகளை முன்வைத்து உத்தரவாதம் வழங்கப்பட்டதில் காற்றில் பறக்காத உத்தர வாதம் இருக்கிறதா ? என்று கேட்கவேண்டியுள்ளது.