Hot News
Home » செய்திகள் » தமிழகத்தில் சந்திக்கும் இந்திய- சீனத் தலைவர்கள்

தமிழகத்தில் சந்திக்கும் இந்திய- சீனத் தலைவர்கள்

சென்னையை அடுத்துள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரத்தில் ஒக்டோபர் 12 மற்றும் 13-ந்திகதிகளில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் கடும் போட்டியாளர்களாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, வர்த்தக போட்டி என பல பிரச்சினைகள் இருந்தாலும், ஒருங்கிணைந்து செயல்பட்டால் சர்வதேச அளவில் சக்திமிக்க நாடுகளாக மாற முடியும் என்ற கருத்து நிலவுகிறது. சீனாவுடன் சுமுகமான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு சென்றார். அவர் அங்குள்ள உகான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஏப்ரல் 27, 28-ந் திகதிகளில் 2 நாட்கள் அவர்களது சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின் போது இந்தியா, சீனா இடையே ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார். அடுத்த மாதம் (ஒக்டோபர்) 2-வது வாரம் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. சென்னை, பெங்களூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் உட்பட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்களது சந்திப்புக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இறுதியில் சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் மாமல்லபுரம், வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பல்லவ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கற்கோவில்கள் அங்கு புகழ் பெற்றிருப்பதால், மாமல்லபுரம் வர சீன அதிபரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் மாமல்லபுரத்துக்கு பல தடவை வந்து ஆய்வு செய்தனர். மோடி, ஜி ஜின்பிங் இருவரும் தங்கும் இடம், பேச்சுவார்த்தை நடத்தும் இடம், பொழுது போக்கும் இடம், போட்டோ எடுத்துக் கொள்ளும் இடம் ஆகியவை பற்றி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரும் நாட்கள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒக்டோபர் 11-ந்திகதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் மோடியும் அவருடன் ஹெலிகொப்டரில் புறப்பட்டு வருவார். அவர்களது ஹெலிகொப்டர் 11-ந்திகதி மாலை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிராமத்தில் உள்ள ஹெலிபேட்டில் தரை இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடிக்காக திருவிடந்தையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது.

சீன அதிபர் வருவதால் அந்த ஹெலிபேடு தரம் உயர்த்தப்படுகிறது. திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் சுமார் 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள். கோவளத்தில் மிகப்பிரமாண்டமான தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலில் மோடியும், ஜி ஜின் பிங்கும் தங்குகிறார்கள்.

கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் மூன்று அறைகள் கடலை நோக்கி அமைந்துள்ளன. தலா 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த மூன்று அறைகளிலும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அதிநவீன வசதிகள் உள்ளன. அங்கு பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த மூன்று அறைகளும் மேலும் அழகுப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான உச்சக்கட்ட பாதுகாப்புக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் அந்த அறையில் ஒக்டோபர் 12 மற்றும் 13-ந்திகதிகளில் 2 நாட்கள் மோடியும், ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். குறிப்பாக இரு நாட்டு வர்த்தகம் பற்றிய ஆய்வு பேச்சு வார்த்தையில் முக்கிய இடம் பெறும். இது தொடர்பான சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். அதன் தொடர்ச்சியாக உலக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களையும் இரு நாட்டுத் தலைவர்கள் பேசுவார்கள். அந்த வகையில் தற்போதைய பொருளாதார மந்தநிலை பற்றி விவாதிப்பார்கள். மேலும் அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

இந்தியா,- சீனா இடையே ஏற்றுமதி – இறக்குமதி பற்றியும் பேசப்படும். டோக்லாம் பிரச்சினை, இந்திய பெருங் கடலில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரிப்பு பற்றியும் பேசப்படும் என்று தெரிகிறது. இது இருநாட்டு உறவை மேம்படுத்தும் என்று உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் சர்வதேச நாடுகளிடம் கொண்டு சென்ற படி உள்ளது. முதன் முதலாக காஷ்மீர் பற்றி சீனாவிடம்தான் பாகிஸ்தான் கூறியது. ஆனால் அடுத்த மாதம் இந்தியா- சீனா தலைவர்கள் சந்திக்கும் போது காஷ்மீர் விவகாரம் பற்றி எதுவும் பேசப்படமாட்டாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவளம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் போது கடற்கரையை நோக்கிய கண்கவர் புல்வெளி பகுதியில் அமர்ந்து தேநீர் குடித்தப்படி மோடி- ஜி ஜின்பிங் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த புல்வெளி பகுதியில் இருவரும் நடந்து கொண்டே பேசவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி அந்த ஓட்டல் புல்வெளி பகுதி மேலும் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி, ஜி ஜின்பிங் நடந்து செல்வதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டலில் மட்டுமின்றி மாமல்லபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பல்லவ மன்னர்களின் கற்கோவில்களுக்கும் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து வர உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அந்த சிற்ப பகுதிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் ஏராளமான புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளனர். அர்ச்சுணன் தபசு காட்சி, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகிய மூன்று இடங்களிலும் இரு நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள உள்ளனர். இதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. நட்சத்திர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. மோடி-ஜி ஜின்பிங் இருவரும் 12, 13-ந்திகதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். 13ந் திகதி அவர்கள் இருவரும் கூட்டாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளனர். கோவளம் அல்லது சென்னையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையை முன்னிட்டு பல பகுதிகள் இப்போதே பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிபர் செல்லும் வழிகள் அனைத்திலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையே 7-ம் நூற்றாண்டில் இருந்தே தொடர்புள்ளது.

8-ம் நூற்றாண்டில் சீன மன்னர்களும், மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் நட்புடன் வாழ்ந்தனர். பொருட்களை பரிமாற்றம் செய்தனர். அதே போன்று தற்போது மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது