போர்க்குற்றங்களை மைத்திரி பொன்சேகா ஐ.நா வில் ஏற்றுக் கொண்டனர் என கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஐெனரல் கமால் குணரட்ன கூறுகிறார் இராணுவம் போர்க்குற்றங்கள் படுகொலைகளில் ஈடுபடவில்லை என்று இந்த குற்றச்சாட்டு பிரிவினை வாதிகளின் கருத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் இறுதிப் போரில் கமால் குணரட்ன, சவேந்திர சில்வா போன்றோரை வழி நடத்திய இராணுவத் தளபதியே பீல்மாஷல் சரத் பொன்சேகா அத்துடன் இறுதி யுத்த காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தின் போது முக்கிய அதிகாரத்தில் இருந்தவர்கள் இவர்களே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைகள் தொடர்பான 30/1 தீர்மானத்தை ஏற்று இணை அனுசரனை வழங்கியதுடன் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நடாத்த 2021 வரை கால அவகாசத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகாவிற்கு கீழ் பகுதித் தளபதியாக இருந்த கமால் குணரட்ன இராணுவம் போர்க்குற்றங்களை படுகொலைகளை செய்யவில்லை என கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைகள் நடந்தாக சனல் 4 பல ஆதாரங்களை வீடியோவாக வெளியிட்ட போதும் அவற்றை உண்மைக்கு புறம்பானவை என இன்று வரை நிறுவ இலங்கை அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளோ தொழில் நுட்ப சான்றுகளோ பெற முடியவில்லை.