Hot News
Home » செய்திகள் » உரப்பையுடன் இருவர்: வெருகலில் இராணுவத்தினர் குவிப்பு! மோப்ப நாய்களுடன் தீவிர தேடுதல்

உரப்பையுடன் இருவர்: வெருகலில் இராணுவத்தினர் குவிப்பு! மோப்ப நாய்களுடன் தீவிர தேடுதல்

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருவதாகத் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்களிலே சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மற்றும் விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்கிடமானவர்களையும் படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை 6.30 மணியளவில் திருகோணமலை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையோரத்தில் கடற்படை வீரர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் உரப்பையுடன் அப்பிரதேசத்தில் நிற்பதை கண்டு கடற்படை வீரர் அவர்களை நோக்கி சென்ற போது அவர்கள் உரப்பையை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

குறித்த பையை சோதனையிட்ட கடற்படை வீரர் அந்த பையிலிருந்து, ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்று காலை வெருகல் பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பல மோப்ப நாய்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

TELO Media Team 1