வட மாகாணசபை அமைவதற்கு முன், சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என கூறப்படுகின்ற போதிலும் வடமாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் இதை நிறைவேற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முயற்சித்து வருவதாக அதிகாரிகள் இன்று கூறினர்.இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்பு முறையை ஆராய்ந்த நீதிமன்றம், சகல மாகாணசபைகளினதும் அங்கீகாரம் கிடைத்த பின்னரே இதை நாடாளுமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என அறிவித்தது. ஏனைய மாகாணசபைகளில் இந்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் கிடைப்பது பிரச்சினையாக இல்லாத போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும், வடமாகாணசபை இன்னும் அமைக்கப்படாதுல்லதால் அதன் அங்கீகாரத்தைப் பெற முடியாது எனவும் இதனால் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்ற முடியாது எனவும் வாதிடுகின்றன. இந்த விவாதத்துக்கு பதிலளித்த சமுர்த்தி அதிகாரசபையின் ஊடகப் பிரிவு அதிகாரியான சேனக உபேசிங்க, ஆளுநரின் அங்கீகாரம் போதுமானது என்று கூறினார். இந்த சட்டமூலம் சமுர்த்தி அதிகாரசபை, உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை, தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை என்பன இணைந்து திவிநெகும திணைக்களத்தை அமைக்க வழிசெய்யும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில சட்டமூலங்கள் மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட்ட சமயங்களில் வட மாகாண ஆளுநரே அங்கீகாரம் வழங்கினார் என அவ்வதிகாரி குறிப்பிட்டார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், அபிவிருத்தியில் கிராமிய மக்களின் பங்குபற்றுகை மேலும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.