மாகாணசபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லா தெரிவித்துள்ளார்.மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டமான திவிநெகும சட்டத்திற்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.கிழக்கு மாகாணசபையில் திவிநெகும தொடர்பான சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.மாகாணசபைகளுக்கு சொந்தமான 29 விடயங்கள் மத்திய அரசாங்கத்தினால் தீர்மானிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.உதாரணமாக கிராம அபிவிருத்தி, இது தெளிவாக மாகாணசபைகளுக்க சொந்தமான அதிகாரமாகும்.அமெரிக்கா விஜயம் செய்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென, அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்துள்ளார்.எனினும், கிழக்கு மாகாணசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.எமது தலைவர்கள் வெளிநாடுகளில் சென்று ஒன்றையும், உள்நாட்டில் வேறொன்றையும் தெரிவிப்பதனை வழமையாகக் கொண்டுள்ளனர் என, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.