குவைத்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது இரண்டுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். சிறிலங்கா அதிபர் குவைத்தில் தங்கியிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப், தாய்லாந்துப் பிரதமர் ஜிங்லக் சினவத்ரா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநிஜாட் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். குவைத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசக்கூடும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்காததால், அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. இந்தியா சார்பில் வெளிவிவகார இணைஅமைச்சர் அகமட் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.