Hot News
Home » செய்திகள் » முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் – கோடீஸ்வரன்

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் – கோடீஸ்வரன்

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு சர்வதேசம் பதில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான  க. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையின் 7 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆலையடிவேம்பு வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்காலிலே தமிழினம் திட்டமிட்ட முறையில், இரத்தம் தேய்ந்த இன அழிப்புக்களை மேற்கொண்ட இந்த நாள் எமது மனதை முற்றுமுழுவதுமாக உருக்கிக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், தமிழ் மக்கள் என்றென்றும் மறக்கமுடியாத பெரும் துயரையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நாளில் உயிர்நீத்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் போராளிகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாளில் இனப்படுகொலை நடந்த போது கண்ணை மூடிக்கொண்டு சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல, எந்தவித குரலும் எழுப்பாது தமிழ் மக்கள் அநாதரவாக விடப்பட்ட நாளாகும்.
எனவே இப்படிப்பட்ட துன்பகரமான நிகழ்விலே, சர்வதேசம் ஏன் கண்மூடித்தனமாக மௌனமாக இருந்தது.

இனிமேலாவது, எமது மக்கள் இழந்த இழுப்பீடுகளை, இரத்தமும் சதையுமாக கொத்துக்கொத்தாக மடிந்த இந்த உரிமைக்கான போராட்டத்திற்காக மடிந்தவர்களை மனதில் நிலைநிறுத்தி, தமிழ் மக்களுக்குரிய விடிவை, நல்லதொரு தீர்வை சர்வதேசம் தரவேண்டும்.

அதேவேளை, இந்த துன்பகரமான நிகழ்வில் உயிர்நீத்த எமது உறவுகள் அனைவருக்கும் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவுகள், தாய்மார்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு சுடறேற்றி வழிபட்டனர்.