நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வோம் என மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதே நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க தற்போது வரை சுதந்திரமாக இருக்கின்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யாவிட்டால் ஏன் கைது செய்யவில்லை என நாங்கள் கேள்வி எழுப்புவோம்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முக்கிய நபராக ரணில் விக்ரமசிங்கவை அடையாளப்படுத்தியுள்ளோம்.
ஆனால் இந்த அரசாங்கத்தில் அவரை கைது செய்யமாட்டார்கள். ஆகவே எங்களுடைய ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம்.
அவ்வாறு சட்ட நடவடிக்கை முறையாக எடுக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் கைது செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.