இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்க முழுமையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல், பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்கவும் அதற்கு உயிரூட்டல் உட்பட பிராந்தியத்தில் இடம்பெறும் ஏனைய செயற்பாடுகளை தடுக்க முழுமையான உதவியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
1373 ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு அமைய செயற்பட்டு இலங்கையின் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்து தடைவிதிக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் பீரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் முழுமையான விபரங்களை முன்வைத்துள்ளார்.