Hot News
Home » செய்திகள் » சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு!

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
இலங்கை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது.

சம்பூரில் இந்தப் பிரச்சினை காரணமாக இடம்பெர்ந்தோர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் அரச வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசின் இந்தத் திட்டத்தின்படி, சம்பூரிலிருந்து இடம்பெர்ந்தோர், தமது கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்று நிலங்களைப் பெற முடியும். அதை விரும்பாதோருக்கு நஷ்டஈட்டுத் தொகை தரப்படும் என்றார் அரச வழக்கறிஞர்.

ஆயினும் இவ்வாறு காணிகளை கையகப்படுத்துவது சட்டத்திற்கு மாறான ஒரு செயல் என மனித உரிமைகள் சம்பந்தமான வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் காணி சட்ட விதிமுறைகளின் படி, தனிப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆயினும் இங்கு அவ்வாறான
விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

எனவே எதிர் காலத்தில் காணிகளை கையகப்படுத்த வேண்டுமானால் பொதுவாக அமுல்படுத்தப்படும் சட்ட விதிமுறைகளுக்கு அமைய அதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க.

ஆயினும் அரச வழக்கறிஞரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி மொஹான் பீரிஸ், மாற்று காணிகள் மற்றும் நஷ்ட ஈடுகள் பெற்றுக்கொள்ள விரும்பும் இடம்பெர்ந்தோர் சம்பந்தமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு
அரச தரப்பிற்கு உத்தரவிட்டார்.

பின்பு வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 9ம் தேதி வரை ஒத்திவைத்த தலைமை நீதிபதி மொகான் பீரிஸ், அன்றைய தினம் இந்த தீர்வு திட்டம் சம்பந்தமாக மனுதாரர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்

TELO Media Team 1