மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேவன் பிட்டி, பாலியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண்மைச் செய்கைக்காக ஓர் ஏக்கர் வீதம் வழங்குவதற்கு உலக உணவுத்திட்ட செயலகத்தின் மூலம் காடுகள் துப்புரவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். குறித்த மீள் குடியேற்றத்தின் பின்னர்; பல முறை அரச அதிகாரிகளிடமும், காணி அமைச்சு வரைக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய அமைப்புக்களும்,மக்களும் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபரும்,அயல் கிராம கிராம சேவையாளர் ஒருவரும் இணைந்து 60 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அபகரித்து குறித்த காணியை துப்புரவாக்கி சுற்றுவேலியடைத்துள்ளனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து குறித்த அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு வேலிக்கட்டைகளையும் உடைத்து அகற்றியுள்ளனர்.ஒரு சிறிய மரம் வெட்டுவதற்குக் கூட அனுமதி இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கான பெரும் மரங்கள் வெட்டப்பட்டு வேலி அடைக்கப்பட்டிருந்தது.குறித்த அதிகாரிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ் அதிகாரிகள் இந்திய வீட்டுத்திட்டத்திலும் வேறு நபர் ஒருவருடைய பெயரில் ஒப்பந்தங்களைப் பெற்று வீடு கட்டவும்,ஆற்றில் இருந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மணல் அகழ்ந்து வியாபாரத்தில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்களும்,பொது அமைப்புக்களும் குற்றம் சாட்டுகின்றன.இந்த விடயத்தில் உடன் தலையிட்டு காணி அபகரிப்பை நிறுத்துவதுடன் மாந்தை மேற்கில் வள அபகரிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,பொது அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.எம்.ஸ்ரீ ஸ்கந்தராசா அவர்களை பல தடவை தொடர்பு கொண்ட போதும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.