Hot News
Home » செய்திகள் » சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக சட்ட ரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
ஐ.நா தீர்மானம் தொடர்பாக நேற்றய தினம் கட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஐ.நா சர்வதேச விசாரணைகள் நான்கு வகையாக நடத்தப் படலாம். அதில் இரண்டு மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்படலாம். மற்றைய இரண்டு ஐ.நா பாதுகாப்புச் சபை யினால் நடத்தப்படலாம்.

இவற்றில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்படும் விசாரணையே இலங்கை விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் விசாரணையின் இறுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக மட்டுமே அமையும். எனவே இந்த விசாரணை மிக பலவீனமானதாக அமைந்திருக்கின்றது. என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். நாம் தீர்மானத்தின் மூலம் சர்வதேச விசாரணை நடத்தப்படாது என கூறியதாக சிலர் எம்மை விமர்சிக்கிறார்கள்.

ஆனால் அது உண்மைக்குப் புறம்பான விடயம். பலவீனமான விசாரணை என சுட்டிக்காட்டுவதற்கும் விசாரணை நடத்தப்படாது என குறிப்பிடுவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேலும் மேற்படித் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவிலை. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்காக, குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் ஊடாக தண்டிக்கப்படவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

உதாரணமாக சூடான் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டு வழக்கு நடத்தப்பட்ட சட்டரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதுவல்ல தீர்மானத்தின் மூலம் நடக்கப்போவது.

மேலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வகையான தொடர்பும் இல்லை என நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். ஆதனை ஒரு குற்றமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கின்றார். ஆனால் அது குற்றமல்ல. உண்மையான விடயம்.

குறித்த தீர்மானத்தில் தமிழர் என்ற ஒரு வார்த்தை கூட பாவிக்கப்படவில்லை. மதரீதியாக பாதிக் கப்பட்ட சிறுபான்மையினர் எனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எங்கள் பிரச்சினை மதரீதியான பிரச்சினை அல்ல. எங்களுடைய மிக நீண்டகால இனப்பிரச்சினையை மதரீதியான சிறுபான்மையின ங்களின் பிரச்சினையாக அடையாளப்படுத்துவதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்?

அதுவும் தமிழர்களுக்கான தீர்மானம் என்ற வாசகத்துடன் கொண்டுவரப்படுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் நலன்களை அல்லது அவர்களுடைய பிரச்சினைகளை எந்தவொரு கட்டத்திலும் சுட்டிக் காட்டவில்லை என்கின்றபோது அந்த தீர்மானத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என சொல்வதில் தவறில்லை.

இதேபோன்றே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்றன தொடர்பாக விசாரிக்க முடியாது என நாம் கூறியதாகவும். அந்த விடயம் மிக பொய்யானது என மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கின்றார். ஆனால் நாங்கள் குறிப்பிடுவது என்னவென்றால்.

மனித உரிமை என்பது வேறு. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பது வேறு. எனவே சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான விசாரணை நடத்துவதென்றால் அது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது. மேலும் தீர்மானத்தின் 2ம் பகுதி யில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடாபான

விசாரணை என கூறப்பட்டுள்ளது. ஆனால் 10ம் பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் ம ற்றும் அதனோடு ஒட்டிய குற்றங்களுக்கான விசாரணை என குறிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இதில் 10ம் பந்தியில் குறிப்பிடப்பட்தே நடைமுறைக்கு வரும். எனவே சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான விசாரணை என்பது 2ம் பகுதியில் குறிப்பிடப்பட்டு,

10ம் பகுதியில் திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணை நடத்தப்பட்டால் இங்கே நடைபெற்ற இனப்படுகொலை, மற்றும் போர்க்குற்றங்களுக்கான விசாரணை நடத்தப்படப்போவதில்லை. ஏனெனில் அவை சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குள் வருகின்றன.

எனவே எங்கள் கட்சி 6 ஆவணங்களை வழங்கி நாங்கள் எதிர்பார்த்த தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றோம் என கூறும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி விரும்பியே இவ்வாறு போர்க்குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை போன்றவற்றை விசாரிக்க முடியாத அரைகுறை தீர்மானத்தை நிறைவேற்றியது?

மேலும் ஆபிரிக்க நாடுகள் சில ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இறுதியான முடிவினை எடுப்பதில் குழப்பமடைந்தாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கின்றார். அதற்கு காரணம் தமிழ் தரப்பினர் சிலரின் எதிர்மாறான விமர்சனமாம். இது ஒரு அப்பட்டமான பொய். நடந்தவைகள் வேறு.

தீர்மானம் தொடர்பான சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் சிலரை நாங்கள் சந்தித்தபோது அவர்கள் உடனடியாகவே சொன்னார்கள் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்போம். அவர்களுடைய நோக்கம் வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமே என்று.

அப்போது நாங்கள் கூறியது வெறுமனே எதிர்ப்பினை காண்பிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலையிலிருந்து தீர்மானத்தை வலுவானதாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று. அதன் பின்னர் அவர்கள் ஆபிரிக்க ஒன்றியத்தின் கூட்டத்தில் எம்மை பேசி மற்றய நாடுகளின் ஒத்துழைப்பினையு ம் பெறுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி நாங்கள் மார்ச் மாதம் 21ம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்தில் பேச இருந்தபோது இதே நாடாளுமன்ற உறுப்பினருடன் வந்திருந்த ஒரு சிங்கள நபரும், சில புலம்பெயர் தமிழர்களும் இணைந்து அதனை குழப்பினார்கள். நாங்கள் கேட்கிறோம் நாங்கள் அங்கே யாருக்காக பேசுவதற்குச் சென்றோம்?

குறித்த தீர்மானத்தை பலப்படுத்துவது யாருக்கு நன்மையளிக்கும்? எனவே தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். யார் மக்களுக்காக உழைக்கின்றார்கள் என்பதை. மேலும் அதே நாடாளுமன்ற உறுப்பினரே கூறுகின்றார். இம்முறை ஐ.நா தீர்மானத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்காமைக்கு தமிழகத்திலிருந்து அழுத்தங்கள் உண்டாகவில்லை.

அதற்கு காரணம் தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள் என்று. மேலும் அதனால் தமிழகத்தில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும். ஆனால் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் உண்மையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வலுவற்றது. அதனை வலுவானதாக இந்தியாக கொண்டுவர வேண்டும் என்பதற்கான போராட்டங்களே.

அதனை விட குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும், அவர் சார்ந்த கட்சியின் மாகாண முதலமைச்சரும் கூறினார்கள். இந்திய தமிழக மக்கள் ஈழத்தமிழர் விடயத்தில் தலையிடக் கூடாது. எங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று. எனவே தமிழக மக்களுக்கு அது சோர்வினை உண்டாக்கியிருக்கும்.

அதனால் அவர்கள் போராடாமல் இருந்திருப்பார்கள். எனவே தமிழக மக்கள் போராடாமைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்காமைக்கும் காரணம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும், அவர் சார்ந்த கட்சியுமே என்றார்.

TELO Media Team 1