அமெரிக்கா தனது நாட்டுக்காக போராடும் இராணுவத்தினரையும் ஓய்வுபெற்ற படையினரையும் நன்றாக கவனிப்பதில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நாராஹேன்பிட்டியில் புதிய இராணுவ மருத்துமனையை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தனது போர் வீரர்களுக்கு மிக சிறந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.
அமெரிக்கா போருக்கு அதிகளவில் பணத்தை செலவழித்து வருகிறது. ஆனால் போரில் ஈடுபடும் படையினரின் நிலைமைகள் மோசமாக உள்ளன.
அத்துடன் அந்த நாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
அண்மையில் அமெரிக்க இராணுவத்தினர் சிலரை சந்தித்து இலங்கையில் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினேன். அப்போது மறுஜென்மத்தில் இலங்கையில் பிறக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கும் சிறந்த நலன்புரி சேவைகள் வழங்கப்படுகின்றனர் எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்த இராணுவ மருத்துமனையில் ஆயிரத்து 24 இராணுவத்தினர் தங்கி சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் வெளிவாரியாக சிகிச்சை பெறவும் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளன.