Hot News
Home » செய்திகள் » இலங்கை அகதி பிள்ளைகளும் தாய்மாரும் இராமேஷ்வரம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடு

இலங்கை அகதி பிள்ளைகளும் தாய்மாரும் இராமேஷ்வரம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடு

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ள இரண்டு குடும்பங்களின் தாய்மார் அவர்களின் பிள்ளைகளுடன் மண்டபம் அகதிமுகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையன்று தனுஸ்கோடி பகுதிக்கு முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இரண்டு குடும்பங்கள் படகுகள் மூலம் அகதிகளாக சென்றன.

இந்த 10 பேர் அடங்கிய குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை நீதிமன்றம் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிட்டது.

எனினும் குறித்த குடும்பங்களின் 6 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை மாத்திரம் அவர்களின் பெற்றோருடன் தங்கியிருக்க புழல் சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதித்தனர்.

இதனையடுத்து குறித்த இரண்டு குடும்பங்களின் ஐந்து பிள்ளைகளையும் நேற்று நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.

இந்தநிலையில் இரண்டு தாய்மாரையும் அவர்களின் ஐந்து பிள்ளைகளையும் இன்று வியாழக்கிழமை ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த குடும்பங்களின் இரண்டு தந்தையர் மற்றும் தனி ஆள் ஒருவர் ஆகியோர் அகதிகளாக சென்ற போதும் அவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்படுவார்களா? அல்லது ராமேஷ்வரம் முகாமுக்கு மாற்றப்படுவார்களா? என்ற விடயம் வெளியாகவில்லை.

TELO Media Team 1