சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தொடர்பில் தவறான செய்திகள் பிரசுரமாவதாகத் தெரிவித்து, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்களான லசந்த விக்ரமதுங்க, பிரெட்ரிக்கா ஜேன்ஸ் மற்றும் பதிப்பாளர் லால் விக்கிரமதுங்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது பெயர் நீக்கப்பட்டு, ஏனைய இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த வழக்கு விசாரணை தினத்தின்போது பிரெட்ரிக்கா ஜேன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி விவகார வழக்கில் அரச தரப்புக்கு நெருக்கமானவராக மாறிய பிரெட்ரிக்கா ஜேன்ஸ், இப்போது அவர்களின் பழிவாங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.