இலங்கைக்கு ஊடாக பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக வெளியான தகவலை அடுத்து இந்தியாவின் மூன்று கடற்படை கப்பல்கள், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு சென்றுள்ளன.
இந்த மூன்று கப்பல்களும் இராமேஸ்வரத்துக்கு சென்றுள்ளமையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எனினும் மேலதிக தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.
இந்தக் கப்பல் தற்போது தமிழக கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினரின் ஊடுருவலை தடுக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ம் திகதியன்று தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையரான ஷகீர் ஹுசைன், இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தினால் வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை அடுத்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.