Hot News
Home » செய்திகள் » சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கும் எல்லையுண்டு – கூட்டமைப்பிடம் தெரிவித்தார் கிருஸ்ணா

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கும் எல்லையுண்டு – கூட்டமைப்பிடம் தெரிவித்தார் கிருஸ்ணா

சிறிலங்கா பிரச்சினையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுடெல்லியில் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா ஆகியோர் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு புதுடெல்லி வந்துள்ளது. இவர்கள் இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா.சம்பந்தன், இந்தச் சந்திப்பு திருப்திகரமானதாக இருந்ததாக தெரிவித்தார். “இந்தியாவி்ன் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து எஸ்.எம்.கிருஸ்ணா விளக்கிக் கூறினார். தமது முயற்சிகள் தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இன்றுவரை பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். தாங்கள் பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் அவர் எம்மிடம் கூறினார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, எமது தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் எடுத்துக் கூறினோம். எமது மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது. நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார். இனப்பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசு முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. அதேவேளை அதில் சேரமாட்டோம் என்று நாங்களும் கூறவில்லை. சிறிலங்கா அரசுத் தரப்பில் எமக்கு உறுதியளிக்கப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால், ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் அதை ஆராயத் தயார். ஆனால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்ல தாங்கள் தயாராக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சிறிலங்கா அரசுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அதற்கு பதில் தரவில்லை. இருதரப்பு பேச்சில் ஏற்படும் உடன்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசு நடந்து கொள்ளவில்லை. அதனால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நடைபெறும் பேச்சுக்கள் ஏமாற்றத்தில் முடியலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், நியாயமான தீர்வை எட்டக்கூடிய நிலைமை இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயார். அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தைப் பொறுத்தவரை, நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி மக்களிடம் ஆலோசித்து பரிசீலிக்கத் தயார்” என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

TELO Admin