தமிழ் இனத்தின் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக நாளை புதன்கிழமை (17) யாழ்ப்பாணத்திலும் , 19 ஆம் திகதி மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பில் மேற்படி இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் இனத்தின் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பங்குனி 17 ஆம் திகதி புதன்கிழமை காலை- 10 மணிக்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து பங்குனி- 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கீழ்வரும் பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.
தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழ்மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு மதத்தலைவர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.