தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள்

இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்துள்ளதோடு 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் அங்கம் பெற்றுள்ளன.

குறித்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் சார்பில் சி.வேந்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் யதீந்திரா மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பம் இட்டனர்.

Posted in Uncategorized

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் : சஜித் பகிரங்கம்

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கான (Mannar) விஜயத்தை இன்று (15) மேற்கொண்ட சஜித், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை

மேலும் தெரிவிக்கையில், “மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.

வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

முக்கியமாக நாட்டின் நீதிப்புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

மாகாணசபை முறைமை

இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்நிலையில், மாகாணசபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சியால் உடைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளாா்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசி வருவதாகவும், ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளாா்.

Posted in Uncategorized

சம்பந்தனின் வெற்றிடத்தை நிரப்ப ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: ரெலோ கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடன் நிரப்புவதற்கு விரும்புகிறோம் என தமிழர் ஈழ விடுதலை இயக்கம்(TELO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கும்  ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருக்கு ரெலோவின் செயலாளர் நாயகம் தனித்தனியே கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முதலாவதாக மறைந்த இரா.சம்பந்தன் ஐயாவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, கடந்த 23 வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக எங்கள் எல்லோராலும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு இரா.சம்பந்தன் ஐயா செயற்பட்டு வந்தார். தற்போது அவரது மறைவுக்குப் பின்பு புதிதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் கடந்த காலங்களில் பல உள்வீட்டுப் பிரச்சினைகள், மனவேதனைகள் வந்தபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தினுள் எமது மக்களின் தேவை, நன்மை கருதி ஒற்றுமையாகத்தான் செயற்பட்டு வந்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக நாடாளுமன்றத்தினுள் செயற்பட விரும்புகின்றோம்.

எனவே, ஏற்பட்டுளள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடனும் நிரப்புவதற்கு விரும்புகின்றோம்.

நாடாளுமன்ற சிரேஷ்ட தன்மை மற்றும் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே, 26 வருடங்களுக்கு மேலாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

Gallery

Gallery

Gallery

Posted in Uncategorized

இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் – ரெலோ

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான பயணத்தில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் வரிசையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற மறைந்த அரசியல்வாதிகள் வரிசையில் சம்பந்தனும் இணைந்துகொண்டுள்ளார்.
1977களில் தன்னை நாடாளுமன்ற அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட சம்பந்தன் அவர்கள் 1983 ஜுலைக் கலவரத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டும், இலங்கை அரசியலமைப்பின் 6ஆம் திருத்தத்திற்கு ஆதரவளிக்கமுடியாது என்றும் எதிர்ப்பினை வெளிக்காட்டியமையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். இருந்தாலும் அதன் பின்னரான 18 வருடகாலங்கள் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் இருந்திருந்த போதிலும் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்திருந்தார். அது தமிழ் மக்களுக்கான அவருடைய அரசியல் பணிக்குக் கிடைத்த வெகுமதியாகும். 
2009க்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமைப் பேராட்டத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமல்ல ஒருமித்த, பிரிக்கப்படாத நாட்டுக்குள் பல விமர்சனங்களுக்கும் பலரது வேறுவிதமான விருப்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒரு சமரஷ்டி முறையிலான தீர்வைக் கொண்டுவருவதற்கு முயற்சித்தார்.

அவ்வேளைகளில் மாறிமாறிவந்த அரசுத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டவர். அதே நேரத்தில் முஸ்லிம் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும் சமாந்தரமாக அணுகுவதிலும் பின்நிற்கவில்லை. அதனால் தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல்வாதிகளாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தார். 

தன்னுடைய முதுமையினையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பாடுபட்டவரான ஆர்.சம்பந்தன், வெளிநாட்டு தூதுவர்கள், உலக நாடுகளின் தலைவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவராக இருந்தார். சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடமும் தமிழ் மக்களுடைய விடயங்களை எடுத்தியம்பும் வகையில் தன்னுடைய அரசியலை தொடர்ந்து வந்திருந்த அவர் இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் ஜனநாயக வழிமுறையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார்.

அந்தவகையில்தான் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி   சிங்கள அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடியதுடன், 2015ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வேளையில் அரசியலமைப்பு மாற்றத்திற்காக பாடுபட்டிருந்தார். 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவிடாது அரசியல் ரீதியாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒர் பேரிழப்பாகும்.
2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைமைதாங்கி வழிநடத்திவந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவிலும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களிலும் அண்மைக்காலங்களில் மனம்நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒன்றுமையும் ஒருமிப்பும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பயணமுமே நாம் அவருக்குச் செய்யும் இறுதிக்கடனாகும்.

ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியை இழந்து துயருறும் தமிழ் மக்கள், அவருடைய குடும்பத்தார், அவருடைய கட்சியினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோ.கருணாகரம் பா.உ.
செயலாளர் நாயகம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
01.07.2024

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

நேற்று 29 ஆம் திகதி வவுனியா விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைக்கப்படும் மக்கள் அமைப்பு சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. இதில் தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் தமிழ் தேசிய கட்சிகள் 7 வருகை தந்தன. கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையில் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எழுதுவது மேற்படி சந்திப்பின் நோக்கம். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நடந்த சந்திப்பின் முடிவில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பாலும் எழுதப்பட்டு,ஏற்றுக் கொள்ளப்பட்டது.அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பை தமிழ்த் தேசியப் பேரவை என்ற பெயரில் அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.கொள்கைளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைத்தாத்திடும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்துக்குள் மூன்று கட்டமைப்புப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. முதலில் வவுனியாவில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கூடிய பொழுது அது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்டது.அதே கூட்டிணைவு பின்னர் அதிகளவு குடிமக்கள் சமூகங்களை இணைத்துக் கொண்டு தன்னை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளின் மூலம்,பலப்படுத்திக் கொண்டு,தன் பெயரை தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைத்துக் கொண்டது.

அந்தப் பொதுச்சபையானது தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இறங்கி சிறிய மற்றும் பெரிய சந்திப்புகளை நடத்தி வருகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தறிவதும் கருத்துக்களைப் பரப்புவதும் சந்திப்புகளின் நோக்கம் ஆகும்.

மேற்படி தமிழ் மக்கள் பொதுச்சபையானது நேற்று கட்சிகளோடு இணைந்து ஏற்படுத்திக் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கு தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பேரவையானது எதிர்காலத்தை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தத் தேவையான உப கட்டமைப்புகளை உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவையில் மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சம அளவில் இருப்பார்கள். அதுபோலவே அப்பொதுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் உபகட்டமைப்புகளும் சம அளவுக்கு மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களையும் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டிருக்கும்.

இந்த உபகட்டமைப்புகளில் ஒன்றுதான் யார் பொது வேட்பாளர் என்பதனைத் தீர்மானிக்கும். மற்றொரு கட்டமைப்பு பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். மற்றொரு கட்டமைப்பு பிரச்சாரப் பணிகளைத் திட்டமிடும், முன்னெடுக்கும். மற்றொரு கட்டமைப்பு தேர்தல் நிதியை நிர்வகிக்கும். இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்கி அக்கட்டமைப்புகளுக்கு ஊடாக ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும் புதிய கட்டமைப்பானது ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையில் அது பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது. 2014க்குப் பின் தமிழ் மக்கள் பேரவையானது கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் கொண்ட ஒரு ஹைபிரிட் வடிவத்தில் உருவாக்கப்பட்டது.அதன் இணைத் தலைமைகளாக மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகத்தில் இருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள்.

அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு தேவை இருந்தது. அக்கட்டமைப்பு ,அதாவது தமிழ் மக்கள் பேரவையானது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தமிழ் அரசியலில் அதிகரித்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இரண்டு எழுக தமிழ்களை நடாத்தியது. அது மட்டுமல்ல, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்குத் தேவையான முன்மொழிவையும் முன் வைத்தது. அம் முன்மொழிவானது கடந்த 15 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் முக்கியமானது.அது மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகங்களும் இணைந்து தயாரித்த ஒரு முன்மொழிவு என்ற அடிப்படையில் அதற்கு ஒரு காலம் முக்கியத்துவம் உண்டு.உள்ளடக்க முக்கியத்துவம் உண்டு. அந்த முன்மொழிவு இப்பொழுதும் செல்லுபடியாகக்கூடியது.

தமிழ் மக்கள் பேரவையானது பெருமளவுக்கு பிரமுகர் மைய அமைப்பாக இருந்தது. மேலிருந்து கீழ்நோக்கிக் கட்டப்பட்டது. அப்பிரமுகர்களில் ஒருவராக இருந்த விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் ஒரு புதிய கட்சியை அறிவித்ததோடு தமிழ் மக்கள் பேரவை அதன் மகிமையை இழக்கத் தொடங்கியது. மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகள் ஒரு பொது உடன்பாட்டைக் காணத்தவறிய பின்னணியில், தமிழ் மக்கள் பேரவையானது படிப்படியாக இறந்து போய்விட்டது.

எனினும் அது அதன் இறுதி காலகட்டத்தில் உருவாக்கிய ஒரு கட்டமைப்புத்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு ஆகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு உபாயத்தை கையாள வேண்டும் என்பதைக் குறித்து ஆராய்வதற்காக அப்படி ஒரு சுயாதீனக் குழுவை தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியது. அச்சுயாதீனக் குழுவானது, ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை அக்குழு சந்தித்தது. சில கட்சிகள் அக்கோரிகையை ஏற்றுக் கொண்டன. சில கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஒரு கட்சி தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாகக் கூறியது. அப்படிப்பட்டதோர் பின்னணியில், சுயாதீன குழுவானது ஒரு கட்டத்துக்கு மேல் முன்நகர முடியவில்லை.அது தனது அவதானிப்புகளையும் அனுபவங்களையும் ஓர் அறிக்கையாக வெளியிட்டதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது.

எனினும் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற விடயத்தைப் பொறுத்தவரையிலும் அதை ஒப்பீட்டுளவில் செயல் பூர்வமாக முன்னெடுத்த ஒரு கட்டமைப்பு என்று பார்த்தால், அது மேற்சொன்ன சுயாதீனக்குழுதான். சிவாஜிலிங்கம் குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் பொது வேட்பாளர்கள் அல்ல.அவர்களை ஒரு பொதுக் கட்டமைப்பு முன் நிறுத்தவும் இல்லை.ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவானது பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்தது. ஆனால் முடியவில்லை.

அச்சுயாதீனக் குழு தொடங்கிய வேலையைத்தான் அண்மை மாதங்களாக குடிமக்கள் சமூகங்களும் சில கட்சிகளும் சில செயற்பாட்டாளர்களும் இணைந்து முன்னெடுத்து வருகிறார்கள். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக முதலில் சிவில் சமூகங்கள் தங்களுக்கு இடையே ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தின. அடுத்த கட்டமாக அவை தம்மை ஒரு மக்கள் அமைப்பாக பிரகடனப்படுத்தின. அடுத்த கட்டமாக அந்த மக்கள் அமைப்பானது கட்சிகளோடு ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றது.அந்த உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் அரசியலில் மூன்று பெயர்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இம்மூன்று பெயர்களும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் மக்கள் அமைப்புகள், தொடர்ச்சியாகவும் கட்டமைப்பு சார்ந்தும் திடசங்கற்பத்தோடும் முன்னேறி வருகின்றன என்பதுதான் அது.

அவ்வாறு புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்கள் அமைப்புக்கள் தீவிரமாக, விசுவாசமாக வினைபுரிகின்றன என்பதனைத் தான் காட்டுகின்றது. ஒரு கட்டமைப்பிலிருந்து மற்றொரு கட்டமைப்பு பிறப்பது என்பது ஓர் அரசியல் கூர்ப்பைக் காட்டுகின்றது. கட்டமைப்புக் கூர்ப்பைக் காட்டுகின்றது.

தமிழ்ப் பொது வாழ்வில் குறிப்பாக அரசியலில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கப்படுவது குறைவு என்ற விமர்சனம் உண்டு. அருவமாக சிந்திப்பது, கற்பனையில் திழைப்பது, இலட்சிய வாதமாகக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால்,கட்டமைப்பு சார்ந்து செயல்படும் பண்பு மிகப் பலவீனமாகவே உள்ளது.கட்டமைப்புகளை உருவாக்கினால் தான் வேலை முன் நகரத் தொடங்கும்.எல்லாவற்றிக்கும் ஒரு கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் இருக்க வேண்டும்.

ஒரு தமிழர் தனக்கு ஒரு வீட்டைக் கட்ட முற்பட்டால், முதலில் அவர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கும் ஒருவரிடம் போவார். அவருடைய ஆலோசனைப்படி வீட்டை எங்கே கட்ட வேண்டும்? எப்படி அறைகளை அமைக்க வேண்டும்? போன்ற விடையங்களைத் தெரிந்து கொள்வார். அதன்பின் அவர் எங்கே போக வேண்டும்? ஒரு கட்டிடப்படக் கலைஞரிடம் போக வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு கட்டிடப்பட கலைஞர்களிடம் போவது கிடையாது. அதற்குச் செலவு அதிகமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

ஆனால் அதற்குரிய துறை சார் ஞானம் கட்டிடப்பட கலைஞரிடம் தான் இருக்கும். ஒரு வீட்டைக் கட்ட விரும்பும் நபர் எதைக் கற்பனை செய்கின்றாரோ, அல்லது எதை மனதில் படமாக வரைந்து வைத்திருக்கின்றாரோ, அதனை தூலமாக, அதற்கான தொழில் நுட்ப மொழியில் வரைவதற்கு துறை சார்ந்த நிபுணத்துவம் தேவை. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவ்வாறான துறை சார்ந்த நிபுணத்துவத்தை அணுகுவதில்லை. செலவு மட்டும் ஒரு காரணம் அல்ல.அது தொடர்பான கட்டமைப்பு சார்ந்த சிந்தனை குறைவு என்பதும் ஒரு காரணம் தான். அதன்பின் வீட்டுக்குரிய கட்டுமானத் திட்டத்தை வரையும் பொழுதும் அங்கே துறை சார் நிபுணத்துவம் பெறப்படுவது குறைவு.வீட்டு உரிமையாளரும் மேசனும் இணைந்து திட்டங்களைப் போடுவார்கள். படங்களை வரைவார்கள். அவர்களுடைய கற்பனை தான் முடிவில் வீடாக மாறும்.

இந்த விடயத்தில் அதாவது ஒரு வீட்டைக் கட்டும் விடயத்தில் அதற்குரிய தொழில்சார் நிபுணத்துவத்தை பெறுபவர்கள் மிகக் குறைவு. குறிப்பாக பண வசதி படைத்தவர்கள்தான் அதைச் செய்வது உண்டு.ஆனால் வசதி குறைந்தவர்கள் வாஸ்து விவகாரத்துக்கு மட்டும் ஒரு துறை சார் ஆளைத் தேடி போவார்கள்.மற்றும்படி கட்டிடப்பட கலைஞராகவும் கட்டடத் துறைசார் பொறியியலாளராகவும் எல்லாமுமாகவும் மேசனும் வீட்டுக்காரருமே தொழிற்படுவார்கள். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வீடு கட்டுகிறார்கள்.

இதே ஒழுக்கத்தை பொது வாழ்விலும் பல விடயங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.குறிப்பாக அரசியலில்,கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கின்ற, கட்டமைப்புகளுக்கு ஊடாக தொழில் புரிகின்ற போக்கு மிகப் பலவீனமாகவே இருந்து வருகின்றது. இந்த பலவீனமான ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முற்படும் தரப்புகள் எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திப்பது என்பது முன்னேற்றகரமானது.இக்கட்டமைப்புகளில் ஆரம்பகட்டப் பலவீனங்கள் இருக்கலாம்.ஆனால் அவை பெரும்பாலும் ஜனநாயக முறைக்கூடாகத் தெரிவு செய்யப்பட்டவை.பொறுப்புக்கூறும் பண்புமிக்கவை. நீண்டகால நோக்கில் திட்டமிடப்படுகின்றவை. இப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் வினைத்திறனோடு செயல்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் தமிழரசியலானது அறிவுபூர்வமான, கட்டமைப்பு சார்ந்த,ஒரு புதிய பண்பாட்டை வளர்த்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

Posted in Uncategorized

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான கப்பல், விமான போக்குவரத்துகளை விரிவுபடுத்த இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக க.சசிகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுமென கர்தினால் மல்கம் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் சுதந்திரமும் பறிபோகும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.

வளமான, வலிமையான நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையழுத்துட்டுள்ளதாக க.சசிகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் பல கோடி நிதியை இலங்கை அரசாங்கத்திற்கு ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 10 ஆயிரம் பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய-இலங்கை நல்லுறவைச் சீர்குலைக்கும் விதமாக, இலங்கையின் கத்தோலிக்க ஆயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

Related

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் விஜிந்தன் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்கப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர்,21ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

“நாளை முல்லைத்தீவு“ எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன், அவரின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் முகநூல் பதிவுகளை அனுப்பி மொட்டை கடிதம் அனுப்பியிருந்தனர்,முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனூடாக ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாடுகளை முடக்க எடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடித்து அவரின் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முயற்சியால் ஏழு நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரெலோ அமைப்பின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் திருவுருவச்சிலை நாளை திறந்து வைக்கப்படும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனைத்து போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்  அறியத்தருவது எதிர்வரும் 23.06.2024  (ஞாயிற்றுக்கிழமை)   அன்று மாலை 4.00 மணியளவில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் அடலேறு சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்க இருப்பதனால் அனைவரும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இன மத பேதங்களை கடந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

“ஈழப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது” -சிறி சபாரத்தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வவுனியா மாவட்ட நிருவாகம்.

Posted in Uncategorized

ரெலோ அமைப்பின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை நாளை திறந்து வைக்கப்படும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனைத்து போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்  அறியத்தருவது எதிர்வரும் 23.06.2024  (ஞாயிற்றுக்கிழமை)   அன்று மாலை 4.00 மணியளவில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் அடலேறு சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்க இருப்பதனால் அனைவரும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இன மத பேதங்களை கடந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

“ஈழப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது” -சிறி சபாரத்தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வவுனியா மாவட்ட நிருவாகம்.

Posted in Uncategorized