ரெலோ சுவிஸ் கிளையால் வுவுனியா தாஸ் நகர் முன்பள்ளிக்கு நிதியுதவி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
ரெலோ சுவீஸ்கிளையால்,வவுனியா பூந்தோட்ட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தாஸ் நகர் முன்பள்ளிக்கு
(10.03.2024) ஆசிரியைக்கானா மாதாந்த கொடுப்பனவுமாவட்ட பொறுப்பாளர் புருஸ் (விஜயகுமார்) ஊடாக வழங்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டத்தில் எமது கட்சியினரால் 1990 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட தாஸ் நகரத்தில் உருவாக்கப்பட்ட விபுலானந்தர் முன்பள்ளியின் நிர்வாகச் செலவு மற்றும் இரண்டாவது ஆசிரியைக்கான மாதாந்த கொடுப்பனவு போன்றவை 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சுவிஸ்கிளையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

விபுலானந்தர் முன்பள்ளி, தாஸ் நகரில் அமைந்துள்ளது . இப்பாடசாலையில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.
இந்த கிராமமானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியால் 1990 பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் சிறீ நகர், தங்கா நகர் ,குட்டி நகர், குகன் நகர், பாஸ்கரன் நகர் என ஆறுக்கு மேற்பட்ட குடியேற்ற கிராமங்கள் ரெலோ வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால் அக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது

எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்டப் பொதுச் சபை உறுப்பினர் குழுக் கூட்டம் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் திரு. ஹென்றி மஹேந்திரன் அவர்களின் பிரசன்னத்துடன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு. நேசன் கந்தசாமி அவர்களின் தலைமையில், அக்கரைப்பற்று பிரதேச பொறுப்பாளர் செல்வன்: முருகப்பன் சிவானந்தன் அவர்களின் அனுசரணையுடன் கடந்த 2024.03.15 ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இதன் போது, கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மேலும், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அமையவுள்ள நிருவாகக் கட்டமைப்பு தொடர்பில் உப தலைவர் ஹென்றி அண்ணன் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக அக்கரைப்பற்று பிரதேச பொறுப்பாளர் திரு : சிவானந்தன் மற்றும், பொதுக்குழு உறுப்பினர்களது ஒருங்கமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அக்கரைப்பற்று 7/4 வட்டாரக் கிளையின் செயலாளர் திரு. வன்னியசிங்கம் லோகநாயகம் ( குட்டி ) அவர்கள் எமது காட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. சபா.நேசராஜா அவர்களும் பிரதேச பொறுப்பாளர்கள் மற்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பினதும் மோசடி,

ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு,

மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம் செய்து பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (Katsiaryna Svieydzenka) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்று இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரார்கள் வனவளத் திணைககள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திறகு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிசாருக்கு எதிரான கோசங்களை ஆர்ப்பாட்டக்கரரர்கள் எழுப்பினர். இதன்போது அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான வினோதரராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, து.ரவிகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய-இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டும்! – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள தொலைநோக்கு அறிக்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இலங்கை – இந்திய சமூகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை நினைவுகூரும் வகையில் விசேட நினைவுச் சின்னமொன்றும், இந்திய – இலங்கை உறவுகளில் அண்மையில் இடம்பெற்ற விசேட தருணங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்- சபா.குகதாஸ் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் , மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை IMF பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது, சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரயோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகள் ஆளுநருடன் சந்திப்பு

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை நாம் அடுத்த வாரம் சந்திக்க உள்ளோம் – சஜித் பிரேமதாச

இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25% எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற இன்னும் பல புள்ளி விவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடிய குழுவாக மாறிவருவதனை எடுத்துக் காட்டுகின்றன.

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதால், இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி,இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை. ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்படுவதையும் சிறைச்சாலைகள் திறப்பதையும் தடுப்பதற்காகவே தனது இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாட்டின் பாடசாலை கட்டமைப்பு வலுப்பெறும் போது சிறைச்சாலைகள் மூடப்படுகிறது.பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்துவதே பிரபஞ்சம் திட்டத்தின் பிரதான நோக்கம். நவீனத்துவ, ஸ்மார்ட் கல்வியை வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதுள்ள வங்குரோத்து நிலையில் இருந்து மீள, சரியான பயணப் பாதையில் பயணிக்க வேண்டும். நாடு அனுபவித்த அவலத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்கக் கூடாது. அடுத்த சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உலகம் புதிய தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், அந்த புதிய தொழில்நுட்பத்தை இந்நாட்டில் கல்விக்கு வழங்காமல் இருப்பது பாடசாலை மாணவர்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் போட்டியிடலாம்.ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரைக் களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.கட்சி என்ற ரீதியில் பலமானதாகவே உள்ளோம்.ஆகவே இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று ஆளும் தரப்பின் ஒரு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுகிறார்கள். கட்சிக்குள் இருந்துக் கொண்டு தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது என்பது பிரச்சினைக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரல்ல,அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சியின் உயர்மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஆகவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் இனி வலுவான முறையில் முன்னெடுப்போம் என்றார்.

அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை இலங்கை கைவிட வேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும் விதத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில்மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவி;த்துள்ளது.

சர்வதே நாணயநிதியத்திற்கான கடிதமொன்றில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் சிவில் சமூகத்தின் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்தும் நாட்டில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நகல்சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நல்லாட்சி மற்றும் ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள் கண்காணிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் பல சமீபத்தைய நடவடிக்கைகள் சட்டங்களில் உத்தேச அரசசார்பற்ற அமைப்புகள் சட்டமும் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized