ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் அறிவிக்க வேண்டாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரமுனவைச் சேர்ந்தவர்கள் கருத்து வெளியிடுவது சிக்கலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் அக்கட்சியின் அமைச்சர்கள் பலர் அரசியல் மேடைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், கட்சிக்குள் அது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இனிமேல் ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த அதிபர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.