ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இது தெளிவானதொரு நாட்டுக்கானதும் மக்களுக்கானதுமான புதிய பயணத்திற்கான ஆரம்பமாகும் என்று சு.க. தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தின அனுஷ்டான நிகழ்வு கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கேள்வி : சு.க.வின் தற்போதைய நிலை குறித்து உங்கள் நிலைப்பாடு ?
பதில் : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி : புதிதாக தனி வழியில் பயணிப்பதற்கு தயாராகிறீர்களா?
பதில் : ஆம். தெளிவாக புதிய பயணத்தையே ஆரம்பித்துள்ளோம். நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
கேள்வி : நீங்கள் தற்போது காரசாரமாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளீர்களல்லவா?
பதில் : நான் எப்போதும் காரசாரமாகவே பேசுவேன்.
கேள்வி : நடைமுறை அரசியல் குறித்து ஏமாற்றமடைந்துள்ளீர்களா?
பதில் : நான் என்றுமே ஏமாற்றமடைபவன் அல்ல. இந்நாட்டு அரசியல் நானே மகழ்ச்சியுடன் இருக்கின்றேன். காரணம் சாதாரண கிராம இளைஞனாக இருந்து ஜனாதிபதியாகியிருக்கின்றேன்.
கேள்வி : நல்லாட்சி அரசாங்கத்தினால் விற்கப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்பதாகக் கூறினார்களே?
பதில் : நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய சொத்துக்களை விற்பதற்கு நான் எதிர்ப்பினை வெளியிட்டேன். எனது எவ்வித தலையீடும் இன்றியே துறைமுகத்தையும் விற்றனர். நான் அறிந்த வகையில் நல்லாட்சியில் வேறெந்த விற்பனையும் இடம்பெறவில்லை என்றார்.