நாளை 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை மறுதினம் (13) ஆரம்பமாகவுள்ளது.

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

நவம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை, 07 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

நவம்பர் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதோடு சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாத காலப்பகுதியில் பாராளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 9.30 முதல் முற்பகல் 10 மணி வரை 30 நிமிடங்கள் ஐந்து வாய்மொழிமூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மற்றும் குழுநிலை விவாதம் ஆகியன முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.