அரசியல் அத்துமீறல், செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது-  பா.  உ . ஜனா

ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கினாலும் மோசமாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவையும், இந்த விடயத்தின் தார்ப்பரியத்தை ஜனாதிபதியவர்கள் தற்போது உணர்ந்துள்ளமைமையையும் நான் வரவேற்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களுக்குள் தற்போது வெளியாகிய சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பதையொட்டி மட்டக்களப்பு வலயக் கல்;விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியையும், மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இந்த அமைச்சுக்கள் தொடர்பான விடயப் பரப்பு எமது நாட்டின் சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அமைச்சுக்களாகும். நாட்டின் நிகழ்கால நிலைமை மாத்திரமல்ல எதிர்கால நிலைமையினையும் வலுப்படுத்துகின்ற முக்கிய துறைசார் அமைச்சுக்கள் இவையாகும்.

எமது நாட்டின் கல்வித்துறை ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்தது. ஆனால், தமது வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சரும் மேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என வினவினார். நாங்கள் எங்கே தவறுவிட்டோம் என்று வினவினார். எங்களுக்குத் தவறிய இடம் எது எனவும் வினவினார்.

கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் திருப்தி அடையக்கூடிய வகையில் முன்னேறியுள்ளோமா? என நான் வினவுகின்றேன்.

சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியன் அந்தஸ்த்துக் காலத்தில் அரசாங்கத்தில் வலுவேறாக்கல் கொள்கை (Separation of power) முறையான அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனால் அரச துறையில் Check and Balance நிலைமை பேணப்பட்டு வந்தது. ஆனால், 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும், அரசியல்வாதிகளின் செல்வாக்கும், அரசாங்கக் கட்சி எம்பிக்களின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள் நுழையத் தொடங்கியது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை இதற்கு கல்வி அமைச்சும் விதிவிலக்கல்ல.

இன்று, எமது கல்வித்துறை நாம் பெருமைப்படத்தக்க நிலையில் இருக்கின்றதா? நான் இதற்காக கல்வி அமைச்சரை விரல் நீட்டி குற்றம் சாட்டவில்லை. அவர் திறமையானவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால், கல்வித் துறையில் நடப்பது என்ன? அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவும் எமது நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மறையாக விமர்சிக்கின்றது. நேர்மறையாக சிந்திக்கிறது என்று எம்மீது இலகுவாக குற்றஞ்சாட்டி நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. நாங்கள் யதார்த்தத்தைக் கண்டு யதார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தை உரைக்கின்றோம். உண்மை சிலவேளை உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். ஆனால், இதுவே கல்வித்துறையின் இன்றைய யதார்த்தம்.

கல்வி அமைச்சின் கீழ் இருக்கின்ற திணைக்களங்களையும் நிறுவனங்களையும் நோக்கினால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்வீர்கள். ஆனால். இந்த திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் தலைமைகள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பு அடிப்படையிலோ, கல்வித் தகமை அடிப்படையிலோ இல்லை. இன விகிதாசார அடிப்படையிலும் இல்லை. அந்த பிரதேசத்தின், அந்த தேர்தல் தொகுதியின், அந்த மாவட்டத்தின், அந்த மாகாணத்தின் அரசாங்கம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, அவரவர் தேவைக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். இன்னும் கூறப்போனால், பாடசாலை அதிபர் இருந்து ஆசிரிய ஆலோசகர் ஈறாக கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வரை அரசியல் ரீதியான நியமனங்களாகவே இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்று வடகிழக்கில் கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. இவை வடகிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? எப்படியொரு கல்வியினால் உயர்ந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்? உண்மையிலேயே எனது மாகாணத்தில் கல்வித் துறை சார் நிருவாகம் தொடர்பாக நடைபெறுகின்ற சீர்கேடுகளை இந்த உயரிய சபையில் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். இது எவர் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியோ, தனிப்பட்ட குரோதமோ அல்ல. எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பின் வெளிப்பாடே இதுவாகும்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன். ஏனெனில், இந்த நாடு இனப்பிரச்சினை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முதல் காரணியே அரச பல்கலைக்கழக அனுமதியில் திறமையைப் புறக்கணித்து மாவட்ட விகிதாசாரக் கோட்டாவினைக் கொண்டு வந்ததேயாகும். இதனை, இதன் உண்மைத் தன்மையின் தார்ப்பரியத்தை எமது ஜனாதிபதியவர்கள் உணர்ந்துள்ளமைமையை வரவேற்கின்றேன்.

இலங்கைளயில் தேசிய கல்வி நிறுவகம் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்றது. 1985ம் ஆண்டு 25ம் இலக்க சட்டத்தின்படி இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குத் தொழில் அங்கீகரச் சான்றிதழ்களை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தான் அதிகாரம் இருக்கின்றது. தற்போது அத்தேசிய கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகம் ஆக்குவதற்கான யோசனை எழுந்துள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு தேசிய கல்விப் பல்கலைக்கழகமாக மாற்றலாம். இங்கு 24 கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பாரிய கட்டிட மற்றும் இதர வசதிகளும் இருப்பதனால் இலகுவாக இதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

அதேபோல் பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளையும் இணைத்து அதனையும் உங்கள் யோசனையின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றலாம். ஆனால் 2019, 2020 களிலே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவர்களிலும் பார்க்க இவ்வருடம் இரட்டிப்பான மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு ஆசிரிய மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு தற்போது ஐயாயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதாரச் சூழலிலே ஒருநாளைக்கு நூற்றுஅறுபது ரூபாய்களே கிடைக்கின்றன. இதிலேயே அவர்களின் ஒருநாளைக்கான மூன்றுவேளை சாப்பாடு உட்பட இதர செலவுகளும் அடங்குகின்றன. எனவே இந்த ஐயாயிரம் ரூபா விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்கள் போசாக்கான ஆசிரியர்களாக வெளிவந்து கற்பிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும்.

அது மட்டுமலல்லாமல், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஜெய்கா திட்டம் ஊடாக ஜப்பானில் விசேட கல்வியினைப் பயிற்றுவிப்பதற்காக விணப்பம் கோரியிருந்தார்கள். அந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்கம் 2022.11.09ம் திகதியிட்டு கல்வி அமைச்சிற்கு அந்தக் கடிதத்தை அனுப்;பியிருந்தார்கள். ஆனால் கல்வி அமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு 2022.11.21ம் திகதியே அதற்குரிய கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்கள். அந்தக் கடிதங்கள் அந்தந்த வலயங்களுக்கு 22ம் திகதியே கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த விண்ணப்ப முடிவுத்திகதியோ 23ம் திகதியுடன் முடிவடைகின்றது. இவ்;வாறிருக்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்த விடயம் 23ம் திகதி காலை 10.00 மணிக்கே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது பகல் 01.00 மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்று. இவ்வாறு மூன்று மணி நேர கால அவகாசத்தில் விண்ணப்பிக்கச் சொன்னால் அவர்கள் தங்களது விடயங்களை எவ்வாறு தேடி எடுப்பார்கள். இது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாமல் இந்த நாட்டிலிருந்து எவரும் ஜெய்கா திட்டத்தின் விசேட பயிற்சிக்கு செல்ல முடியாமல் போயுள்ளமை மிகவும் கவலையான விடயம் என்று தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள – பா.உ. ஜனா

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று காலையில் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் இந்த சபையில் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், குறிப்பாக தமிழ் மக்களையும் வேதனைப்படுத்தும் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்றுகூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கடந்த சில அமர்வுகளுக்கு முன்பு அனைவரையுமே இந்த சபையில் எழுப்பி இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு நீங்கள் எல்லாம் தயாரா என்று கேட்டது மாத்திரமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை எழுந்து 13 பிளஸ் என்று கூறுங்கள் என்று கூறிய ஜனாதிபதி மாவட்ட சபைகளைப் பற்றி பிரஸ்த்தாபித்திருப்பது மிகவும் வேதனையான விடயம்.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வருவது யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சம்பவம் தான். அந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலையும் அந்த அதிகாரப்பரவலாக்கத்தையும் என்றோ இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

உங்களுக்குத் தேவையென்றால், தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்குமென்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்த நாட்டின் முக்கியமானதும், பிரபலமானதும், பிரச்சினைகளுக்குரியதுமான அமைச்சுக்களில் இவையும் ஒன்று.

2023க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சுகாதார அமைச்சுக்கான மொத்த செலவின மதிப்பீடு 319 லட்சத்து 990 மில்லியன்களாகும்.

சுகாதார அமைச்சானது, எமது நாட்டில் சுகாதார அமைச்சர்களாகப் பதவி வகித்த பலரின் செயற்றிறன் இன்மையை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, பல அமைச்சர்களது பதவி விலகல்களுக்கு, பல அமைச்சர்களது ஊழல்களுக்குக் காரணமான ஒரு அமைச்சாக இருந்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சராக நியமனம் பெறக்கூடிய, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடிய தகுதியும், திறமையும் உள்ளவர்கள் பலர் இருந்தும் ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் விருப்பம் மாத்திரமே இந்த அமைச்சிற்குரிய அமைச்சரை நியமனம் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. சுகாதார அமைச்;சு இன்று- கடும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி வந்தமைக்கான காரணமும் அதுவேயாகும்.

அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவம் சார் தொழிற் சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சுக்குமான நெருக்கமான இணைப்பு இன்மையே சுகாதார சேவையின் முக்கியமான குறைபாடாகும்.
அதையும்விட சுகாதார அமைச்சின் சகல மட்டங்களிலும் ஊழல்கள் இருந்ததை கடந்தகாலங்களில் காணமுடிந்தது.

மருந்துக் கொள்வனவில் ஊழல், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவில் ஊழல், தரமான மருந்துகளைப் பெறுவதில் ஊழல் என்று சகல மட்டங்;களிலும் ஊழல் காணப்பட்ட அமைச்சே சுகாதார அமைச்சாகும்.

இதற்கு சிறந்த ஒரே ஒரு உதாரணம் கடந்த ‘கொவிட் -19’ தொற்று பரவிய காலத்தில் அரசு நடந்து கொண்ட முறை இதற்கு சான்றாகும். இராணுவத் தளபதியை‘கொவிட்’ செயலணியின் தலைவராக நியமித்து யுத்தம் நடத்தியதைப் போல ‘கொவிட்’ஐ கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். இங்கு இராணுவத்தை இணைத்ததை தவறு எனக் கூறவில்லை. சுகாதார அமைச்சையும் சுகாதார உயர் பதவி ஆளணியினரையும் இராணுவத்தின் கீழ் இராணுவ ஆணைக்கு கட்டுப்படுத்தி வைத்தீர்கள்.

‘கொவிட் -19’ தடுப்பூசியினை பெற்ற விலைக்கும் அதாவது அதன் உண்மையான விலைக்கும் – செலுத்திய விலைக்கும் இடையிலான வேறுபாடுகள் நிலவியதாக அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. அன்னியச் செலாவணிப் பிரச்சினையால் நாடு அவதியுற்ற நேரம் நோய்த் தடுப்புக்காக கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் அதன் காலாவதித் திகதி முடிவடைந்ததனால் அழிக்கப்பட்டதாகவும் அறிய முடிந்தது. இவற்றின் உண்மைத் தன்மையை கௌரவ அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமான ஆய்வு வழிமுறைகளில் பெற்ற முடிவுகளைக் கொண்டு சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்வதை விடுத்து ‘நீர்முட்டிகளை கங்கையில் வீசி’ எமது சுகாதாரத் துறையினை வளர்க்க முடியாது என்பதை தற்போதைய அமைச்சராவது புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று மண் மாபியா, மர மாபியா, போல சுகாதாரத்துறையும் பணமீட்டும் மாபியாக்களைக் கொண்ட துறையாக மாறி வருகின்றது. எமது இலவச சுகாதார சேவை இன்று சவாலுக்குள்ளாகி வருகிறது. சுகாதாரத் துறையும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் சிலர் அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கின்றார்கள்.

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதை விட தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதே மேல் என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறியுள்ளது. இத்தகைய மன மாற்றத்துக்கு அரச வைத்திய சாலைகளில் பணிபுரியும் சில வைத்தியத் துறைசார் நிபுணர்களின் நடத்தை காரணமாக இருப்பது ஒன்றும் ரகசியமல்ல. இதற்காக அவர்களது தனிப்பட்ட சிகிச்சை வழங்குவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், சில மகப்பேற்றுச் சிகிச்சைகள், சில அறுவைச் சிகிச்சைகள், சில பரிசோதனைகள், குறிப்பிட்ட சில தனியார் வைத்தியசாலைகளில் தான் செய்யப்படவேண்டும் என மறைமுகமாக நோயாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவது பகிரங்க ரகசியமாகும்.

அண்மைக்காலமாக நடந்து வருவதும், அதிகரித்து வருவதுமான பெரும் துயர சம்பவம் மருத்துவக் கவலையீனங்களால் வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களாகும். ‘மருத்துவரின் தவறு புதைகுழியோடு மறைந்துவிடும்’ என்றொரு வழக்கு மொழியுள்ளது. இக் கூற்றினை தற்போதைய நிகழ்வுகள் உண்மையென நிரூபித்து வருகின்றன. நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாகவும், அளவு தொடர்பாகவும், அதில் இடம்பெறும் ஊழல் தொடர்பாகவும் மருத்துவத் துறைசார் நிருவாகிகளின் பங்கும் உள்ளதோ என பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

இம்முறை வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவு அபிவிருத்திக்கும், அறுவைச் சிகிச்சைப் பிரிவு புனரமைப்புக்கும், இதற்கான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும் ஏற்பாடுகள் கூறப்பட்டுள்ளது. இவை முன்மொழிவுகளாக மட்டும் இருக்காது இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட முழுத் தொகையும் எவ்வித ஊழலும், கமிசனும், லஞ்சமுமின்றி பயன்படுத்தப்பட வேண்டும்.

இத்துடன் கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைத்தியசாலையாகத் திகழும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, புற்றுநோய் சிகிச்சை அலகு, சிறுவர் நோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, கதிர் வீச்சுப் பிரிவுகள் விரிவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அண்மைக்காலமாக வைத்தியத்துறை நிபுணர்களின் ஓய்வு வயது தொடர்பாகவும் நிபுணத்துவ வைத்தியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் மூலம் நிபுணத்துவ வைத்தியர்களின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்படலாம் என வைத்திய நிபுணர்களின் சங்கம் கரிசனை செலுத்தியுள்ளது. இது தொர்பாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் முறையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அத்தோடு மட்டக்களப்பு வைத்தியசாலை சம்பந்தமாக சில தேவைகளைக் குறிப்பிட்டாகவேண்டும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை அலகு இருக்கின்றது. ஆனால், கத்லப் இல்லை. கத்லப்; போதனா வைத்தியசாலைக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவல நிலை இருக்கின்றது. அங்கு இருதய நோயாளர்கள் அஞ்சியோக்கிராம் செய்ய வேண்டுமாக இருந்தால் கூட யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு, அல்லது கொழும்பு, கண்டிக்குச் செல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. எனவே கிழக்கு மாகாணத்திலிருக்கும் ஒரேயொரு போதனா வைத்தியசாலைக்கு கத்லப் அவசியமாகத் தேவைப்படுவதை உணர்ந்து அதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். றீனல் யுனிற் 90 வீதம் முடிந்திருந்தும் அங்கு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் சிறுநீரக நோயாளர்களுக்கு பூரணமான சந்திர சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய நிலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இல்லை. அதே போல சத்திரிசிகிச்சைப் பிரிவு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் வேலைப்பாடுகள் 99 சதவீதம் முடிவடைந்திருக்கின்ற நிலையில் அதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படாமலிருக்கின்றது. அந்த உபகரணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இந்தப் பெரிய வைத்தியசாலைக்கு களஞ்சியப்படுத்தக்கூடிய மருந்துக் களஞ்சியசாலை இல்லாமலிருக்கிறது. மிகவும் கஸ்ரமான நிலையில் விடுதிகளுக்குள்ளும் சிறிய சிறய அறைகளுக்குள்ளும் மருந்துகளைச் சேர்த்து வைக்கவேண்டிய நிலைமை இருக்கின்றது. அதே போன்று கொழும்பிலிருந்து மருந்துகளை ஏற்றிவருகின்ற லொறி மிகவும் பழையதாகும். ஓட்டை விழுந்ததாகவும் காணப்படுகிறது. மழை காலத்தில் அந்த லொறி வரும் போது அந்த லொறிக்குள் மழைநீர் உட்புகக் கூடிய நிலையும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திற்கென்று மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் பி.எஸ்.எஸ்.பி திட்டத்தினூடாக இரண்டு கூலர் லொறிகள் இலங்கை வந்தடைந்து துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்கிக்கொள்ள முடியாத இலங்கையின் நிலைமைக்கு அமைய சுங்கத் திணைக்களத்தில் இருந்து அவை விடுவிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே அதனை விடுவித்து மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்திய சுகாதர சேவைகள் பணியகத்திற்கு அவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே வைத்தியர்களுக்கான ஆளணி 487ஆகவும் அனுமதிக்கப்பட்ட ஆளணி 290 ஆகவும் இருக்கின்ற நிலையில் தற்போது அவ் வைத்தியசாலையில் 225 வைத்தியர்களே சேவையில் இருக்கின்றார்கள். அத்துடன் பொது மருத்துவ மாதுக்கள் 262 பேர் தேவைப்பட்டாலும் அங்கு 220 பேர் மாத்திரமே கடமையில் இருக்கின்றார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்திற்காக அனுப்பப்பட்ட ஆளணிகள் அம்பாரை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் மேலதிகமாக நிரப்பப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மருத்துவ மாதுக்களுக்கான மேலதிக ஆளணிக்காக விண்ணப்பத்திருக்கின்றார்கள் அதனையாவது மத்திய அரசு பூரணப்படுத்தி மேலதிக மருத்துவ மாதுக்களை கொடுப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவ மாதுக்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதியிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு, யாழ் வைத்தியசாலைகளுக்கே கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதி இல்லாமல் இருக்கின்றது. அதே போன்று அமைச்சரவையினால் எட்டு திட்டங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டத்தினூடாக அவை மட்டக்களப்பிற்கு வரவேண்டும்.

அதேபோன்று இன்னும் பல குறைபாடுகள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருக்கின்றன. கல்முனை வாழைச்சேனை வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு இரவு எட்டு மணிவரை திறந்திருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆறு மணியுடன் மூடப்படுகின்றது. எனவே அங்குள்ள பணிப்பாளர் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அனுப்புவதற்காகவா ஆறு மணியுடன் மூடுகின்றார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் பணிப்பாளர் தரம் அற்ற பணிப்பாளராக இருப்பதுதான் பல விடயங்களுக்குக் காரணமாக இருக்கின்றது. பல மில்லியன்கள் செலவில் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது நோயாளர்கள் இல்லாமல் இருக்கின்ற நிலையில் அங்கு நியுரோ வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபுணர் போன்றவர்கள் விடுதி இல்லாமல் இருக்கின்றார்கள். அதை விட 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நியுரோ திரப்பி 2022ம் ஆண்டு அதன் உத்தரவாதக் காலம் முடிவற்றதன் பின்னர் தான் இயங்குநிலைக்கு வந்துள்ளது. அதே போன்று பத்து மில்லியன் பெறுமதியான ஓட்டேமெடிக் மைக்ரோ பயோலொஜி கல்சர் இயந்திரம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.

உண்மையலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழல் மிகுந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது. எனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு கணக்காய்வு குழுவை அல்லது ஒரு ஆணைக்குழுவை அமைத்து அந்த வைத்தியசாலை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

 

உள்ளுராட்சிக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுங்கள்– ஜனா பா.உ

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது.  எனவே நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை  உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோ.கருணாகரம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது இன்றைய தினம் சனிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நிதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அவையில்  வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதென்பது வினோதமானதொன்றல்ல. அது சம்பிரதாயபூர்வமான நிகழ்வே. இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் நாட்டின் புத்திஜீவிகளும் அவரவர் பார்வையில் இந்த வரவு செலவுத்திட்டத்தினை விமர்சித்தனர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் சார்ந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பார்வையிலும் எமது கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையிலும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை விமர்சிப்பது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
69லட்சம் வாக்குகளை அள்ளிக் கொண்ட ஜனாதிபதியும் 3ல் இரண்டு பெரும்பான்மை பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தம்மை ஆதரித்த மக்களால் அடித்துத் துரத்தும் அளவுக்கும் தமது பதவிகளைத் தாமே இராஜினாமா செய்யும் அளவுக்கும் நாட்டின் நிலைமை சென்றது ஏன். மேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லப்படும் இந்த நேரத்தில் இது குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என்று வினவியதுடன் நாம் தவறிய இடம் எது எனவும் இந்த சபையில் வினா எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியினையே நான் கேட்கின்றேன். எங்கே தவறு நடந்து என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா. எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நாம் தவறிய இடம் எது என்பதை இன்னம் நீங்கள் உணரவில்லையா? ஒரு காலத்தில் இலங்கை நாடு என்றால் உலகம் தலை நிமிர்ந்து நின்று பார்த்த நிலைமை மாறி, இன்று கடன் செலுத்த முடியாத ஒரு நாடு, தனது வங்குரோத்து நிலையை தானே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு என்ற நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருக்கின்றீர்களா?.
இந்த நாட்டின் பொருளாதார வளத்தை அபிவிருத்தி நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக கடந்த மூன்று தசாப்த்துக்கும் மேலாக யுத்தம் நோக்கித் தள்ளினீர்கள். இந்த யுத்தம் தந்த விளைவே இன்றைய பொருளாதாரப் பிரச்சினை. இனப்பிரச்சினையே முதற் காரணம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை பாதுகாப்புச் செலவீனம் விழுங்கிக் கொண்டது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற பிராந்திய வல்லரசுகளின் யுத்தப் பாதீட்டை விட எமது நாட்டின் யுத்தத்துக்கான பாதீடு வானளாவ உயர்ந்து நின்றது. யுத்த காலத்தில் தான் இந்த நிலை என்றால், யுத்தம் மௌனித்து 13 வருடங்களாகியும் யுத்தப் பாதீடு எமது நாட்டின் வருமானத்தின் பெருந்தொகையினை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக இன்னமும் இந்தளவு பெருந் தொகையினை ஒதுக்கித்தான் ஆகவேண்டுமா?
நமக்கு எந்த அயல் நாட்டினது அச்சுறுத்தலுள்ளது. எந்த அண்மைய நாடுகளின் அச்சுறுத்தலுள்ளது, உள்நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எங்கிருந்து வருகின்றது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கி யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கின்றீர்கள்.
பாதுகாப்புச் செலவீனத்துக்கு இவ்வளவு தொகை ஒதுக்கியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4000 ரூபா கொடுப்பனவை 2500ஆகக் குறைத்துள்ளீர்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகளான பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் எவ்விதமாற்றமுமில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மேதகு ஜனாதிபதியவர்கள் இலங்கையின் வரலாற்றைக் கற்;பதற்கு தனியான நிறுவனத்தைத் தாபிப்பது தொடர்பான முன்மொழிவொன்றினை செய்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பார்வையில் வரலாறு என்பது சிங்களும் பௌத்தமும்தான். வரலாற்று மூலாதாரம் என்பது மகாவம்சம் தான். இந்த மகா வம்சம் மகாநாம தேரரின் கற்பனை என்பதை நீங்கள் இன்னமும் புரியாதது ஏன். முதலில் புரிந்து கொள்ளுங்கள் பௌத்தம் மதம். சிங்களம் மொழி. பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் எந்த விதமான இணைப்பும் தொடர்பும் இல்லை.
பௌத்தம் இலங்கையில் மட்டுமல்ல. தென்னாசியா, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ள ஒரு மதம். அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழியில் அவர்களுக்கு ஏற்ற வகையில் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வழிபடும் மதம். இலங்கையில் கூட தமிழ் பௌத்தம் இருந்துள்ளது. தென்னிந்தியாவில் தமிழ் பௌத்தம் தமிழ்ப் பௌத்தப்பள்ளிகள் இருந்துள்ளன. இதன் விளைவாகவே சீத்தலைசாத்தனார் சீவக சிந்தமணி எனும் தமிழ்ப் பௌத்த காவியத்தைப் படைத்தார். இதே போலவே நாதகுத்தனார் குண்டலகேசி என்னும் பௌத்த தமிழ்க் காவியத்தைப் படைத்தார்.  அமுதசுரபி அட்சய பாத்திரம் தந்த பௌத்த துறவி மணிமேகலை சுத்தத் தமிழிச்சி. பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் தொடர்பு ஏற்பட முன்னர் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட தொடர்பும் பிணைப்பும் முந்தியது. பௌத்தம் சிங்களத்துக்குமான தொடர்பு பிந்தியது.
வரிக் கொள்கை தொடர்பான உங்களது உண்மையான நேர்மையான கொள்கை என்ன? நீங்கள் உங்கள் வரவு செலவுத்திட்டத்தில் எடுத்துரைத்தது போல நாட்டு நலனுக்கான வரிக் கொள்கையினை செயற்படுத்துவீர்களா? எமது நாட்டின் கடந்த கால வரிக் கொள்கையினை நோக்கும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கமிசன் கொடுப்பவர்களுக்குமான வரிக்கொள்கையே எமது நாட்டில் இருந்தது.
நாட்டின் வருமானத்தின் முக்கிய மூலாதாரம் வரி வருமானங்கள். நாட்டின் பொருளாதார நிலைமைக்கேற்ப நாட்டின் மக்கள் வாழ்நிலைக்கேற்ப நாட்டு மக்கள் மீது அதிகரித்த சுமையினை ஏற்படுத்தாது வருமானத்தை பெறுவதற்கேற்ப வரி வருமானங்களைப் பெறுவதே அரசாங்கத்தின் வரிக் கொள்கையாக இருக்க வேண்டும். இது நம் நாட்டில் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நடந்ததா? ஒரேயொரு உதாரணம் சீனி வரி. உங்கள் வரிக் கொள்கை தொடர்பாக சிந்தியுங்கள்
இலங்கை அரசியல் என்றால் அரசியல்வாதிகளென்றால் அதன் ஒருவரி வரைவிலக்கணம் ஊழல், கமிசன், இலஞ்சம் என்பதேயாகும். இது ஒருவரை மட்டுமல்ல ஒரு அரசாங்கத்தை மட்டும் சுட்டி விரல் நீட்ட அல்ல. மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளுக்கும் இது பொருந்தும். ஒரே உதாரணம் மத்திய வங்கி ஊழல், சீனிக் கமிசன். இதைவிட மேலும் விபரிக்கத் தேவையில்லை.
உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக கூறியுள்ளீர்கள். அரச சேவையின் சுதந்திரத்தை அரச உத்தியோகத்தர்களின் சுதந்திரத்தை அவர்களது ஆளுமையை முடங்கச் செய்தது யார்? வெள்ளைக்காரன் தந்த சோல்பரி அரசியல் யாப்பில் சுயாதீனமாக இயங்கிய பகிரங்க சேவை ஆணைக்குழு (Pரடிடiஉ ளுநசஎiஉந ஊழஅஅளைளழைn) நீதிச் சேவை ஆணைக்குழு (துரனiஉயைட ஊழஅஅளைளழைn) ஆகியவற்றின் சுதந்திரத்தை முடக்கியது யார். டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபடுகிறோம் என்று மார்தட்டி 1972ல் கொண்டு வந்த குடியரசு அரசியல் யாப்பு முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்தர்களின் சுதந்திரமும் கௌரவமும் ஆளுமையும் அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்துள்ளது.
இந்த நிலைமையை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மாற்றுமா? அது மாத்திரமல்ல அரச சேவையில் இன விகிதாசாரப் பதவிமுறை நிட்சயம் பேணப்பட வேண்டும். இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் எத்தனைபேர் தமிழர்கள். வெளிவிவகார சேவையில் எத்தனை பேர் தமிழர்கள். அகில இலங்கை சேவையில் உள்ள உயர் பதவிகளில் எத்தனை பேர் தமிழர்கள். நியதிச் சபைகளின் உயர் பதவிகளில் எத்தனைபேர் தமிழர்கள். கூட்டுத்தாபனங்களின் தலைவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்.
நான் இனவாதம் பேசவில்லை. மொழி வாதம் பேசவில்லை. நீங்கள் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக முன்மொழிவினைச் செய்துள்ளதனால் இதனைக் கூறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளேன். இதற்குக் காரணம் என்ன. எம் தமிழ் நிருவாக உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் கிடக்கத் தயாரில்லை. பதவியிலிருந்தாலும் அரசியல்வாதிகளின் உத்தரவுக்கும் அவர்களின் ஊழல்களுக்கும் ஏற்ப கடமைபுரியத் தயாரில்லை. இதனால் அரச சேவை தனிச்சிங்கள மயமாகியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு மேதகு ஜனாதிபதியவர்களே உங்களுக்குண்டு.
இதில் பரிகசிக்க வேண்டிய விடயம் மத்திய வங்கி ஆளுனராக நிவாட் கப்றாலை நியமிக்கும் போது ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துடைய மத்திய வங்கி ஆளுனராக நியமித்து அவரை நிதி அமைச்சர் கூட கட்டுப்படுத்த முடியாத தற்துணிவை வழங்கும் அளவுக்கு எமது அரச சேவை இருந்ததை நான் நினைவுறுத்த விருப்புகிறேன்.
கௌரவ நிதி அமைச்சர் வனப்பரம்பல் அதிகரிப்புப் பற்றிக் கூறியுள்ளார். பாராட்டுகிறேன். ஒரு நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு குறிப்பிட்ட விகிதாசார அளவு வனப்பரம்பல் தேவை. ஆனால் நடப்பது என்ன? இந்த நாட்டின் வனவளத்தை, இந்த நாட்டின் நீர் வளத்தை, இந்த நாட்டின் நில வளத்தை அழித்தது இந் நாட்டு மக்களல்ல. அந்தந்த காலத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதேச சபை உறுப்பினர்கள் இவற்றை அழித்தார்கள்.
வடகிழக்கின் நீர் வளமோ, நிலவளமோ, வன வளமோ இவர்களால்தான் அழிக்கப்படுகிறது. இதனை நாம் எத்தனை தடவை எடுத்துரைத்தோம். காது கொடுத்துக் கேட்டீர்களா. காலம் கடந்த ஞானம் இது. கனியுமோ எனக்குத் தெரியாது.
பாற்பண்ணை உற்பத்தி தொடர்பாகக் கூறினீர்கள் கிழக்கில் பாற் பண்iணாயளர்களின் பண்ணை வளர்ப்புப் பிரதேசங்களான மயிலத்தமடு, மாதவணை, கந்தர்மல்லிச்சேனை போன்ற பிரதேசத்தை கிழக்கின் ஆளுனர் சிங்களக் குடியேற்றமாக மாற்ற முயற்சித்தார். எங்கள் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. இப்படியெனில் எப்படி பாலுற்பத்தி அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியமானது அந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் என்பது மக்கள் ஆணை ஊடாகவேயாகும். இதற்காக மக்கள் தமது விருப்பத்தினை வழங்குவதற்காக உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். வெற்றி பெறுவோமோ தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் ஜனநாயகப் பண்பினை மிதித்து சீரழித்து விடக்கூடாது. எமது கௌரவ ஜனாதிபதியவர்களை நான்  ஒரு ஜனநாயக கனவானாகவே இன்றும் மதிக்கின்றேன். அவரது அரசாங்கம் தோல்வியடைந்த போது தனது உத்தியோக பூர்வ மாளிகையிலிருந்து அடுத்த நிமிடம் தனது கையில் தனது ப்பிரீவ் கேசை சுமந்தபடி வெளியேறிய காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், எமது நாட்டில் இதுவரை கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை.  எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கான முற்றான தீர்வல்லாவிடினும் முதற் புள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை ஜனநாயக அடிப்படையில் இயங்க முடியாது ஆளுக்காள் சட்டக்காரணங்களைக்கூறி அவர் மீது இவர் குறை சுமத்தி மாகாண சபைத் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. எமது ஜனாதிபதி உண்மையிலேயே ஒரு ஜனநாயகக் கனவானாக இருந்தால் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைவிட மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடத்தி மாகாண சபையினை மக்கள் நிர்வாகமாக மாற்றி அமைத்து ஆளுனரின் அதிமேலான அதிகாரத்திலிருந்து குறைந்தபட்சமேனும் விடுவிக்க வேண்டும்.
பழப்ப தோசமோ கூடிய கூட்ட தோசமோ எமது ஜனாதிபதியவர்கள் தனது ஜனநாயகக் கனவான் என்ற பெயரைக் காப்பாற்றுவாரா?
மேதகு ஜனாதிபதியவர்கள் தமது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை ஆரம்பிக்கும் போது தனது வரவு செலவுத்திட்டமானது சமூகப் பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறையான வரவு செலவுத்திட்டம் என எடுத்துரைத்தார். இதற்கு நீங்கள் அளித்த விளக்கம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கூறும் சமூகப் பாதுகாப்பு என்ன? இன்றும் கூட நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணாக பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு மாத்திரமெனக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 43 வருடங்களாகத் தொடர்கிறது. வட கிழக்கு தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அண்மையில் முஸ்லிம்களைத் தொட்டது. இன்று சிங்கள இளைஞர்களின் மீது பாய்கின்றது.  இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் தேவையா என்பதை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவான சமூகப் பாதுகாப்பு என்பதன் ஊடாக நான் கேட்கின்றேன்.
எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் தமிழர்கள் அல்ல. சந்தர்ப்பவாதிகளாகச் சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுக்க முன்னர் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுத்துரைத்தவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் கோரவில்லை.  13 பிளஸ் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் முன்னிலையில் எடுத்துரைத்தவர் மகிந்த ராஜபக்ச அவர்கள்.  இவர்தான் ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று தன் சிங்களத் தமிழில் எடுத்துரைத்தவர். ஆனால், இன்றுவரை எதுவுமே நடந்ததில்லை.
அன்று ஒரு அரசாங்கம் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சி அதனை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும். அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிராந்தியங்களின் கூட்டமைப்பு என்ற அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை இன்றைய ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தீக்கரையாக்கினார். ஆனால் இன்று காலம் கனிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அன்று இனவாதிகளாக பிரகாசித்த சிலர் தவிர அனைவரும் அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஒரு நேர்கோட்டில் வந்துள்ளனர். இது காலம் கடந்த ஞானமோ அவர்களின் மனச்சாட்சி உறுத்தலோ தெரியாது. இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் தவற விடாது நடந்து கொள்வோமானால் எமது அடுத்த வரவு செலவுத்திட்டம் இந்த நாட்டின் சுபீட்சத்தை நோக்கியதாக அமையக் கூடிய வகையில் அடுத்த நிதி அமைச்சர் இருப்பார் என்பதை இந்த உயரிய சபையில் எடுத்துரைக்கின்றேன்.
ஏனெனில் இன்றைய பொருளாதாரச் சீரழிவுக்கு இனப்பிரச்சினையே அடிப்படை. நீங்கள் ஆணிவேரை அழித்துவிட்டு பக்க வேரில் மரத்தினை வளர்ப்பதற்கு முயலாதீர்கள். முறையான அத்திவாரமின்றி முழுமையான கட்டடத்தை ஆக்க முயலாதீர்கள். இந்த வரவு செலவுத்திட்டத்தினை இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் மக்களுக்குச் சுமையேற்றித் தயாரித்ததற்குக் காரணம் இனப்பிரச்சினைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எமது நாடு தீர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் சொல்லத் தேவையில்லை. நாட்டு மக்கள் இதனை அறிவார்கள். அதனால் தான் ஜனநாயகத்துக்குப் புறம்பாக மக்கள் புரட்சி ஒன்று இலங்கை அரசியலில் நடந்துள்ளது. ஆனால்,  நடந்த மக்கள் புரட்சி மூலம் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மலர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்றால் விடை பூச்சியம். வீதியில் நின்றவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள். வீதியில் இறந்தவர்கள் வீட்டுக்குள் இறக்கின்றார்கள். இதை உங்கள் வெற்றி என்கின்றீர்களா?
எமது மக்கள் எமது நாட்டுக்காக எந்தவிதமான துயரங்களையும் எதிர் நோக்கத் தயார். ஆனால், பொருளாதாரத்தின் நன்மைகள். நாட்டின் வளப்பங்கீடுகள் அனைவருக்கும் சமமாக, நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி, பால் வேறுபாடின்றி சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும். இதனை நீங்கள் என்று செய்வீர்கள். இதனை நீங்கள் என்றோ செய்திருந்தால் இன்று எமது நாடு தென்னாசியாவில் மட்டுமல்ல. தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல. உண்மையிலேயே ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும். நீங்கள் நாடு என்று கருதுவது வடக்கை கிழக்கை அல்ல. இன்றும் கூட வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கே நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வடக்கு மட்டும் தமிழர்களின் தாயகப் பூமியல்ல. வடக்கு கிழக்கு மாகாணமே தமிழர்களின் தாயக பூமி. 1881ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை சற்றுக் கவனமாக நோக்குங்கள். வட கிழக்கு தமிழர் தாயகம் சுதந்திரத்தின் பின்னர் எவ்வாறு உங்கள் குடியேற்றங்களாலும் உங்கள் அபிவிருத்தித் திட்டங்களினாலும்  சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
எமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அது ~பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை’ யென்று. அது போல்தான் இந்த வரவு செலவுத்திட்டமும்.
இறுதியாக கடும் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி கொடுத்த சூழ்நிலையில் பிரதமராகி ஜனாதிபதியாகி நிதியiமைச்சராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு காலம் கொடுத்த அதிஸ்டம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை உங்கள் காலத்தில் தீர்க்கப்பட்டது என்ற வரலாறு, எமது நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் ஏழுதப்பட வேண்டுமா இல்லை நீங்களும் உங்கள் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை போன்றவர்தானென்று வரலாறு உங்களைத் தூற்றவேண்டுமா, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத் தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் இணைத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உங்கள் கையில் உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி இலங்கை வரலாற்றில் நீங்கள் வரலாற்று நாயகனாக உயர்வடைய வேண்டும். இதற்கு உங்களுக்கு அந்தத் தைரியமும் பலமும் கிடைக்க நாங்கள் எமது ஆதரவினை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இன்று எதிர்க்கட்சியினர் அனைத்துமே இணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஒன்றுகூடி பொது அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் தெற்குக்கும் மக்களிடையே தங்களுடைய பலத்தைப் பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே இருக்கும். அடுத்து பாராளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ வந்தால் தங்களுடைய பலத்தை நீரூபிப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றீர்கள். ஆனால், நாங்கள் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களோ நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு  ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு  4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்.

தமிழர்கள் சிறுக்கிறார்களா? பெருக்கிறார்களா?

“இனி நாங்கள் எப்பவுமே ஸ்ரீலங்கா பக்கம் போகமாட்டம்.நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு  வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்”இவ்வாறு கூறியிருப்பவர் வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் புலம்பெயரி. அவர் ஒரு இளம் தாய்.ஒரு சிறு பிள்ளையை கையில் வைத்திருக்கிறார்.பயணத்தின் போது தாங்கள் அருந்திய அழுக்கான நீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் போத்தலையும் கையில் வைத்திருக்கிறார்.கனடாவை நோக்கிக் கப்பலில் புறப்பட்ட 303 தமிழர்களில் அவரும் ஒருவர்.அவர்கள் பயணம் செய்த படகு கடந்தவாரம் சேதமடைந்து சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோலவே ஒஸ்ரேலியாவை நோக்கியும் ஆபத்தான கடல்வழிகளின் ஊடாக தமிழர்கள் புலம்பெயர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறு கடல் வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது.கடல் வழியாக மட்டுமல்ல வான் வழியாக வரும்  புலம்பெயரிகளையும் திருப்பி அனுப்பப்போவதாக  ஒஸ்ரேரேலிய அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் உள்ள ஒஸ்ரேரேலிய தூதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஓர் ஆங்கில ஊடகவியலாளரோடு உரையாடும்பொழுது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.இலங்கையிலிருந்து பெருந்தொகையான மூளை உழைப்பாளிகளின் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும்,அண்மை காலங்களில் அந்த விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனால் விசா விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம் என்ற பொருள்பட அவர் கதைத்திருக்கிறார்.

கனடா,ஒஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி மட்டுமல்ல,ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் பெருந்தொகையான தமிழர்களும் சிங்களவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக மேற்படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு என்ற அடிப்படையில் படித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு மட்டும் இதுவரையிலும் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

போர்க்காலங்களில் தமிழ் இளையோர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் அண்மைக்  காலங்களில் சிங்கள இளையோரும் அவ்வாறு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.இவர்களின் கணிசமானவர்கள் மூளை உழைப்பாளிகள்.

ராஜபக்சக்கள் இந்த நாட்டை எந்த மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்களோ,அந்த மக்களே நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் குறிப்பாக தமிழ்மக்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னரும் புலப்பெயர்வு நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் குவிமையம் ஆகும்.

அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பயிலும் ஒரு மாணவரிடம் கேட்டேன்… நல்ல பெறுபேறு கிடைத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அவர் சொன்னார் “வெளிநாட்டுக்குப் போவேன்” என்று. அவருடைய இரண்டு சகோதரர்களும் அவ்வாறு வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.தமிழ் இளையோரில் வகைமாதிரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினரை எடுத்து “எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்?”என்று கேட்டால்…அதற்கு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரின் தொகையே  அதிகமாயிருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே நிதிரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்றுவிட்டது.அந்நாடுகளில் கல்வி ஒரு சுமையாகவோ சித்திரவதையாகவோ இல்லை.அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாட்டில் உள்ள இளைய தலைமுறையில் ஒரு பகுதி வெளியேற முயற்சிக்கின்றது.இவ்வாறு வெளியேற விரும்பும் பலருக்கும் புலம்பெயர்ந்த பரப்பில் யாரோ ஒரு உறவினர் அல்லது ஏதோ ஒரு தொடர்பு உண்டு.அவ்வாறு புலம்பெயர்ந்து செல்வதன்மூலம் தமது குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தலாம்,தாமும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

ஒருபுறம் போதைப்பொருள் பாவனை  வாள் வெட்டுக் கலாச்சாரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இன்னொருபுறம் 2009க்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறும் இளையோரின் தொகை குறையாமல் இருக்கிறது.

தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தாயகம்,தேசியம் சுயநிர்ணயம் என்ற கோஷங்களை விடாது உச்சரிக்கின்றன. ஆனால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஒருபுறம் தாயகத்திலும் டயஸ்பெறாவிலும் பிள்ளைப்பேறு விகிதம் பெருமளவிற்கு குறைந்து வருகிறது. இன்னொரு புறம் தாயகத்திலிருந்து தொடர்ச்சியாக மணப்பெண்களாக ஒரு தொகுதி பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு சமாந்தரமாக மூளை உழைப்பாளிகளும் கள்ளமாகக் குடியேறுபவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் அல்லது செயற்பாட்டாளர்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் ஏதாவது உண்டா?

ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக வனையும் பிரதான அம்சங்கள் ஐந்து இனம்,நிலம்,(அதாவது தாயகம்), மொழி,பொதுப்பண்பாடு,பொதுப் பொருளாதாரம் என்பவையே அவையாகும். இதில் இனம் என்று குறிப்பிடப்படுவது பிரயோகத்தில் தமிழ் சனத் தொகையைத்தான்.ஏற்கனவே போரில் தமிழ் சனத்தொகையில் குறைந்தது மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள். தப்பிப் பிழைத்தவர்களில் இளையவர்கள் இப்பொழுது புலம்பெயர முயற்சிக்கிறார்கள். இனப்படுகொலை புலப்பெயர்ச்சி என்பவற்றால் ஏற்கனவே சனத்தொகை மெலிந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளைப் பேறு விகிதமும் குறைந்து வருவதனால் சனத்தொகை மேலும் குறையக் கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.சர்வோதயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின்போது அங்கு பிரசன்னமாகியிருந்த நடுத்தர வயதைக் கடந்த சுமார் முப்பது பெண்களிடம் வளவாளர் ஒரு கேள்வி கேட்டார்.”நீங்கள் எல்லாரும் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”அவர்களில் அநேகமானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்ததாகச் சொன்னார்கள்.அதன்பின் வளவாளர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் “உங்களில் எத்தனை பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்?”துரதிஷ்டவசமாக அங்கிருந்த பெண்களில் மூவருக்குத்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.ஏனைய அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான்.இதுதான் தமிழ்ச் சமூகத்தின் இப்போதுள்ள நிலைமை. தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது.அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது.

தமிழ் இளையோர் தாயகத்தை விட்டு வெளியேறுவதனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு எதிர்காலம் கிடைக்கலாம். ஆனால் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பார்த்தால் அது தாயகத்தில் சனத்தொகையைக் குறைக்கிறது.தேர்தல்மைய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் வாக்காளர்களின் தொகை குறைக்கிறது.எல்லா விதத்திலும் அது தமிழ் மக்களை பலவீனப்படுத்துகிறது. காசிருந்து என்ன பலன்? தாயகத்தில் சனத்தொகை மெலிந்து கொண்டே போகிறது. ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெருக்கவில்லை சிறுத்துக் கொண்டே போகிறார்களா?

தமிழ் இளையோர் மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தவிப்பு ஏன் அதிகரிக்கின்றது? இதைக் குறித்து தமிழ் கட்சிகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது குடிமக்கள் சமூகங்களோ சிந்திக்கின்றனவா?

சில மாதங்களுக்கு முன்பு வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பங்குத்தந்தை என்னை தனது பங்கில் உள்ள இளையோர் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள்பற்றி பேசுமாறு அழைத்திருந்தார். நான் பேசிக்கொண்டிருந்தேன் ஆனால் அங்கு கூடியிருந்த இளையோர் அந்தப் பேச்சை ரசிக்கவில்லை.அக்கறையோடு கேட்கவில்லை.ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன் “உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நான் கதைக்கின்றேனா?” “ஆம்” என்று சொன்னார்கள.”உங்களைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றி அறிய விரும்பவில்லையா?” என்று கேட்டேன்.அறிந்து என்ன பயன் என்ற தொனிப்படக் கேட்டார்கள்.“சரி,எதிர்காலத்தில் என்னவாய் வர விரும்புகிறீர்கள்? உங்களுடைய வாழ்வின் இலட்சியம் என்ன?” என்று  கேட்டேன். சுமார் 40 பேர் வந்திருந்த அந்தச் சந்திப்பில் நான்கு பேர்களிடம்தான் எதிர்கால இலட்சியம் இருந்தது. ஏனையவர்கள் கேட்டார்கள் “ஏன் அப்படி ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்? வாழ்க்கையை இப்பொழுது இருப்பதை போலவே அனுபவித்து விட்டு போகலாமே?” என்று.உங்களை நீங்கள் புதிய சவால்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லையா என்று கேட்டேன். “ஏன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அவர்களில் அநேகரிடம் ஆகப்பிந்திய தயாரிப்புகளான கைபேசிகள் இருந்தன. பெரும்பாலானவர்கள் ஆகப்பிந்திய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தார்கள்.அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் கேட்டேன்..”உங்களுடைய வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டவை; உங்களுடைய கைபேசிகள் அப்டேட் செய்யப்பட்டவை ;உங்களுடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகள்,கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை; ஆனால் நீங்கள் மட்டும் உங்களை அப்டேட் செய்ய விரும்பவில்லையா?” என்று. அப்பொழுதுதான் அவர்கள் ஈடுபாட்டோடு உரையாடத் தொடங்கினார்கள்.

நான் பேசவந்த விடயத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு அவர்களோடு அவர்களுடைய அலைவரிசையிலேயே நின்று கதைப்பது என்று முடிவெடுத்து, கேள்விகளை கேட்கத் தொடங்கினேன்.அது வெற்றியளித்தது. என்னை அங்கே பேச அழைத்த பங்குத் தந்தையிடம் சொன்னேன் ” ஒரு புதிய தலைமுறையின் நம்பிக்கைகளை நாங்கள் எங்களுடைய நம்பிக்கைகளுக்கூடாக அணுகப் பார்க்கிறோம்.எங்களுடைய நம்பிக்கைகளே அவர்களுடைய நம்பிக்கைகளாகவும் இருக்க வேண்டும் என்று இல்லை.அவர்கள் கைபேசிச் செயலிகளின் கைதிகள். எல்லாவற்றையும் “ஸ்க்ரோல்” பண்ணி கடந்துவிட முயலும் ஒரு தலைமுறை. பெரும்பாலான விடயங்களில் ஆழமான வாசிப்போ, யோசிப்போ,தரிசிப்போ கிடையாது.அவர்களை அவர்களுடைய அலைவரிசைக்குள் சென்று அணுகினால்தான் அவர்கள் எங்களோடு உரையாட வருகிறார்கள்” என்று

கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய நடுத்தர வர்க்கம் குறிப்பாக இளையோர் காலிமுகத்திடலில் முதலில் வைத்த கோஷம் “You are messing up with a wrong generation” – நீங்கள் பிழையான ஒரு தலைமுறையோடு சொதப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்பதாகும்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு காலம் வருகிறதா?

அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் அதிபர் ரணில்விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை அதிபர் 30 ஆக அதிகரிக்க முடியும்.

முன்னதாக, அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கிடைத்த தகவல்களின்படி, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு கேடு – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து கேள்வி எழுப்பிய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதால் நாட்டிற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அடிபணிந்தால் இலங்கை எங்கே போய்நிற்கும்” என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள், தங்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உணர்திறன் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

“நகர அபிவிருத்தி அதிகாரசபை (யுடிஏ) அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக ஒரு செய்தி வந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கமானது வெளிநாட்டினருக்கு வீடுகளை நிர்மாணிப்பதா?

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இவர்களுக்கு வாக்களித்தால் என்னிடம் வீடுகள் கேட்டு வராதீர்கள்,” என்றார். தற்போது சொந்த வீடு இல்லாத பல குடும்பங்கள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

கடன்வழங்குனர்களுடன் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளை இலங்கை பேணும் என உறுதியளிப்பு

இலங்கையின் கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகளின்போது அனைத்து கடன்வழங்குனர்களுடனும் சமத்துவமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை மீள உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும். அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

அந்தவகையில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிகழ்நிலை முறையில் நடைபெற்றதுடன் இப்பேச்சுவார்த்தைகளுக்கு நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமைதாங்கினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘இப்போது இலங்கை மிகக்கடினமானதொரு காலப்பகுதியில் இருப்பதுடன் நுண்பாகப்பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்காக இயலுமானவரை விரைவாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு முயன்றுவருகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல,  அடுத்தவாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 08 ஆம் திகதி அரசங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூடவுள்ளதுடன் இதில் மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது. மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சில அடுத்தவராம் கூடவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 08 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.

மேலும், எதிர்வரும் 10 ஆம் திகதி மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும், வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும் கூடவுள்ளன. இதேவேளை, சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு என்பனவும் எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளன.

இலங்கையில் முதலீடுகள் : பிரதமர் கோரிக்கை

பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோதே பிரதமர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணைகளை துரிதமாக அங்கீகரிப்பதற்குத் தேவையான திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசு ஏலவே திட்டங்களை வடிவமைத்துள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன, இதன்போது கனேடிய தொழிலதிபர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு இதுவரை அரசு எடுத்துள்ள படிமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்திய பிரதமர், இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்பொருட்டு கனடாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒத்துழைப்புக்கள் அவசியமென்றும் தகவல் தொழிநுட்பம், விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக கேள்விகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அப்பிரதிநிதிகள் குழுவிலிருந்த சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்கள், பிரதமரிடம் உறுதியளித்தனர். இலங்கையுடன் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த கனேடிய தொழிலதிபர்கள் சமூகம், இலங்கையில் இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது வர்த்தகங்களை கட்டியெழுப்புவதற்கு தாம் உதவுவதாகவும் விருப்பம் தெரிவித்தனர். வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் ஏற்படும் அநாவசியமான தாமதங்களை அகற்றுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதுடன், பல ஆசிய நாடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் தமது வெளிநாட்டு முதலீட்டு நடைமுறைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.

இக்குழுவில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹென் டொங், ரேச்சல் தோமஸ், கணேசன் சுகுமார், ஆதர் கிறவுஸ், குலா செல்லதுரை, மொஹான் பெரேரா, ஜுட் பிரான்சிஸ், சிவா சிவநாதன், இளங்கோ ரத்னசபாபதி, பிரேம் யசமனய், ரியாஸ் ரவூப், மகேஷ் அபேவர்தன, டேவிட் ஸ்டாஓ, சுதர்ஷன் ஸ்ரீயோகநாதன் மற்றும் அருண் கிருபா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

வெளிநாட்டவருடான திருமண பதிவு கட்டுபாடுகளை நீக்க நடவடிக்கை

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized