மக்கள் இன்று தமது வாழ்வியலை கொண்டு செல்லமுடியாமல் அன்றாடம் வீதியில் நின்று அரசாங்கத்தை வீட்டிற்குச் செல்லுமாறு வலியுறுத்தும் நிலையில், 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றமை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை வளமிக்க பூமியாகப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் மேற்கொண்டு வருவதுடன், ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதில் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் எப்பாடுபட்டாலும் அதைப்பற்றி சிந்திக்காது அரசாங்கத்தைப் பாதுகாத்தே தீருவோம் என 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கங்கணம் கட்டி நிற்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.
இந்த நாடாளுமன்றத்தில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.