மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17 ஆவது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறிப்பாக காந்தி பூங்கா,மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலருக்கும் நேற்றைய தினம் தடை உத்தரவுகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய மதில்களிலும் தடை உத்தரவுகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீர்த் தாரைத் தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் கலகமடக்கும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக அச்சநிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம் திடீரென மாற்றப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.
சித்தாண்டி மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயம் வரையில் சென்றனர்.
தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும், இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி தாய் உண்ணாவிரதம் ஆரம்பித்த இன்றைய தினத்தில் தமிழர்களுக்கான நீதிகோரிய இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்,அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாகத் தீர்வினை வழங்க வேண்டும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தினை
நிராகரிப்போம், கடத்தப்பட்டுக் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோஷங்கள் இந்தப் பேரணியின் போது எழுப்பப்பட்டன.
இந்தப் பேரணி ஆரம்பமான நிலையில் அங்கு வந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போலியான தடையுத்தரவினைக் காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைப் பொலிஸார் வீடியோ, புகைப்படம் எடுத்த போது அதற்கு எதிரான கோஷங்களையும் பேரணியில் சென்றோர் எழுப்பினர்.
தடைகள் அனைத்தையும் தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருநினைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அஅரியநேந்திரன், ஞா. சிறிநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் மற்றும் ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்குச் சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.