அரசாங்கம் குறைப்பாடுகளை திருத்திக்கொள்வது அவசியம் – திஸ்ஸ விதாரண

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல.

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிக்குமிடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உள்ள குறைப்பாடுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவுபெற்ற பங்காளி கட்சி தலைவர் கூட்டத்தில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியில் கூட்டணிய அமைத்துள்ள பங்காளி கட்சிகள் இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலிலும் , ஜனாதிபதி தேர்தலிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளன. இருப்பினும் பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்களும், செயற்பாடுகளும் பங்காளி கட்சிகளை புறக்கணிப்பதாகவும் அமைகின்றன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது பங்காளி கட்சிகளின் நோக்கமல்ல, ஒரு சில வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களுக்க பல முறை குறிப்பிட்டும் எவ்வித சாதகமான தீர்மானமும் கிடைக்கப் பெறவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் 12 அரசியல் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் போது மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்த இடமளிக்க முடியாது.

சுபீட்சமாக எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். ஆளும் தரப்பின் ஒரு சிலரது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துகிறது. முரண்பாடுகளை ஏற்படுத்தி கூட்டணியை பலவீனப்படுத்தி 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட அரசியல் சூழலை ஏற்படுத்துவது ஆளும் தரப்பின் ஒரு சிலரது நோக்கமாக காணப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறைப்பாடுகளை திருத்திக்கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒரு சில செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதம் முற்றிலும் தவறு என்பது பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது என்றார்.