அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியாவிடம் ஒருமித்துக் கோருவதற்காக ஒன்றுகூடிய தமிழ் பேசும் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக இன்று கூடின.

அதன் பிரகாரம் இன்றைய தினம் கொழும்பு குளோபல் டவர்ஸ் தனியார் விடுதில் முற்பகல் 10.30 மணிக்கு முக்கிய சந்திப்பில் தமிழ் பேசும் கட்சிகள் ஈடுபட்டதோடு, இந்தியாவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கும் எழுத்துமூலமான கடித வரைவு தயார் செய்யப்படவுள்ளது.

இந்தக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியனவும் பங்கேற்றிருந்தன.

மேலும், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் கலந்துகொண்டன.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஏழு தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் திண்ணை தனியார் விடுதியில் சந்திப்பில் ஈடுபட்டன.

இதில் பங்கேற்குமாறு தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அக்கட்சி இறுதி நேரத்தில் குறித்த சந்திப்பை பிற்போடுமாறு கோரியிருந்தது.

அதேநேரம், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஏதுவான நிலையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த கூட்டத்தில் பங்கேற்ற மனோகணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சியும் இவ்விதமான கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு பின்னர் கொழும்பு திரும்பி சம்பந்தனையும் சந்தித்திருந்தனர்.

அச்சந்திப்பில் சம்பந்தன் கொழும்பில் கூட்டத்தினை கூட்டுமாறும் அதில் பங்கேற்பதற்கு தான் தயார் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோர் கூட்டாக கூட்டமைப்பின் தலைவருக்கு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அதில், “எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு என்பதை வலியுறுத்தும் அதேவேளை, அரசிலமைப்பில் ஏற்கவே உள்ள 13 ஆவது முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதி செய்து மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த இலங்கை அரசாங்கத்தினை வலியுத்துவதற்கு இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் கட்சிகள் கோருதல்’ என்ற செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு தமிழினம் முகங்கொடுத்துள்ள இக்கட்டான அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு கூட்டத்தினை தலைமைதாங்கி செவ்வனே வழிநடத்துவீர்கள் என்று நம்பிக்கை உரித்துடன் கோரி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றதோடு, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான, .பி.ஆர்.எல்.எப். மற்றும் ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை என்பதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட சி.வி விக்கினேஸ்வரன்,

“ தமிழர்களின் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் சட்ட புத்தகத்தில் இருக்கும் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம்,

“ ஜனாதிபதி செயலணி என்ற பெயரில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கபளீகரம் செய்யும் செயற்பாட்டை முற்றாக முடிவுக்கு கொண்டுவர 13ஐ அமுல்படுத்த வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

“13 ஐ நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய பிரதான கடமைப்பாடு இந்தியாவிற்கு உண்டு” எனத் தெரிவித்தார்.