இலங்கையின் மாகாணசபைகள் தொடர்பில் இந்தியா ஜெனீவாவில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதன் காரணமாகவே, அரசாங்கம் தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிலைப்பாடுகளை வெளியிடுகிறது.
உண்மையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுமானால் எந்த முறைமையில் நடத்தப்படும் என்பதையே முதலில் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான முறைமை, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசாங்கம் ஸ்திரமான நிலைப்பாட்டை நாட்டுக்கு அறிவிக்கவில்லை.
ஜெனீவாவில் இலங்கையின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இந்தியா தெரிவித்துள்ளதால் , தற்போது அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாகக் கூறுகிறது.
ஓரிரு தினங்களின் இந்த விடயம் பரவலாகப் பேசப்படுகிறது. முதலில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்பதையே அரசாங்கம் கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து எப்போது தேர்தலை நடத்தப்படும் என்பதை அறிவிக்க வேண்டும்.
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை யோசனையில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த யோசனை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படவில்லை. அரசாங்கத்திற்கு பாதகமான விடங்கள் தொடர்பில் பேசப்படும் போது , மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்காக வௌ;வேறு செய்திகள் பரப்பப்படும்.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் பசுவதை சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக பிரதமர் கூறினார். எனினும் அது ஊடக பிரசாரமாக மாத்திரமே அமைந்தது.
தற்போது சீனி மோசடி தொடர்பில் பரவலாகப் பேசப்படுவதால் புர்கா தடை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.
அரசாங்கம் கொள்ளை ரீதியானதொரு தீர்மானத்தை எடுக்குமானால் இஸ்லாம் சமூகத்தினருடன் கலந்துரையாடி , அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் அனுமதியுடன் தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்றார்.