இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் – ரெலோ

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான பயணத்தில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் வரிசையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற மறைந்த அரசியல்வாதிகள் வரிசையில் சம்பந்தனும் இணைந்துகொண்டுள்ளார்.
1977களில் தன்னை நாடாளுமன்ற அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட சம்பந்தன் அவர்கள் 1983 ஜுலைக் கலவரத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டும், இலங்கை அரசியலமைப்பின் 6ஆம் திருத்தத்திற்கு ஆதரவளிக்கமுடியாது என்றும் எதிர்ப்பினை வெளிக்காட்டியமையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். இருந்தாலும் அதன் பின்னரான 18 வருடகாலங்கள் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் இருந்திருந்த போதிலும் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்திருந்தார். அது தமிழ் மக்களுக்கான அவருடைய அரசியல் பணிக்குக் கிடைத்த வெகுமதியாகும். 
2009க்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமைப் பேராட்டத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமல்ல ஒருமித்த, பிரிக்கப்படாத நாட்டுக்குள் பல விமர்சனங்களுக்கும் பலரது வேறுவிதமான விருப்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒரு சமரஷ்டி முறையிலான தீர்வைக் கொண்டுவருவதற்கு முயற்சித்தார்.

அவ்வேளைகளில் மாறிமாறிவந்த அரசுத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டவர். அதே நேரத்தில் முஸ்லிம் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும் சமாந்தரமாக அணுகுவதிலும் பின்நிற்கவில்லை. அதனால் தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல்வாதிகளாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தார். 

தன்னுடைய முதுமையினையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பாடுபட்டவரான ஆர்.சம்பந்தன், வெளிநாட்டு தூதுவர்கள், உலக நாடுகளின் தலைவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவராக இருந்தார். சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடமும் தமிழ் மக்களுடைய விடயங்களை எடுத்தியம்பும் வகையில் தன்னுடைய அரசியலை தொடர்ந்து வந்திருந்த அவர் இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் ஜனநாயக வழிமுறையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார்.

அந்தவகையில்தான் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி   சிங்கள அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடியதுடன், 2015ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வேளையில் அரசியலமைப்பு மாற்றத்திற்காக பாடுபட்டிருந்தார். 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவிடாது அரசியல் ரீதியாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒர் பேரிழப்பாகும்.
2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைமைதாங்கி வழிநடத்திவந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவிலும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களிலும் அண்மைக்காலங்களில் மனம்நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒன்றுமையும் ஒருமிப்பும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பயணமுமே நாம் அவருக்குச் செய்யும் இறுதிக்கடனாகும்.

ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியை இழந்து துயருறும் தமிழ் மக்கள், அவருடைய குடும்பத்தார், அவருடைய கட்சியினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோ.கருணாகரம் பா.உ.
செயலாளர் நாயகம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
01.07.2024