உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பிரதான சம்பவங்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில், நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட பிரதிவாதிகள் அடங்குவதாக அறிய முடிகின்றது.
23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாப்பிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களும் கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
இந் நிலையிலேயே இந்த பிரதான 8 குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.