ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் இலங்கையை சீனா ஆதரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பாக இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு சிறீலங்காவுக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.