கிளிநொச்சியில் சீன ஆக்கிரமிப்பு! தமிழரின் பேரில் அனுமதி

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனம் கடலட்டை பண்ணை அமைத்து செயற்படுத்தி வருவதாக அந்த பிரதேசத்தில் இருக்கும் பிரதேச கடற் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கௌதாரிமுனையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்கள் பலர் தாங்கள் கடலட்டை வளர்ப்பதற்கு கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு அதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் சீன நிறுவனம் ஒன்று தங்களின் கடற்பரப்பிற்குள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர். குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீன நாட்டவர்களால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் கடலட்டை வளர்க்கும் ஒருவருடைய பெயரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் பண்ணை அமைத்துள்ளபோதிலும் பூநகரி பிரதேச செயலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடல் தொழில் திணைக்களத்தினதோ அனுமதி பெறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரிடம் இருந்து அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு குறித்த நிறுவனத்துடன் தங்களுடைய கௌதாரிமுனை கடற்றொழிலார் அமைப்பை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கோரி வருவதாகவும் ஆனால் தாங்கள் கைச்சாத்திடவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.