கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்! – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி. கவலை

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறு கைத்தொழில் அல்லது வங்கிக் கடன் ஊவா தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

இன்று வறுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற சிலர் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர். பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – என்றார்.