கோத்தா மாலைதீவிற்கு தப்பிச் சென்றார்; மாலைதீவில் எதிர்ப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சா இன்று அதிகாலை விமானப்படை விமானத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதனை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய அரசின் ஒப்புதலுடனேயே அதனை வழங்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டின் குடிவரவு குடியகல்வுச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியும் அவரது மனைவியும் இரு பாதுகாப்பு உத்தியோகத்நர்கள் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்துள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.

விமானப்படைக்குச் சொந்தமான அன்ரனோவ் 32 ரக விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு மாலை தீவுக்குப் புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஓடு தளத்தில் இருந்தே இந்த விமானம் புறப்பட்டுள்ளது. இதேநேரம் கோட்டபாயவுடன் அவரது சகோதரன் பசில் ராயபக்சாவும் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றபோதும் உறுப்படுத்த முடியவில்லை.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டபாயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதே நேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மாலைதீவின் சுற்றுலாத்துறை சார் அதிகாரியின் அழுத்தமும் வெளியாகி உள்ளது.