பௌத்த ஆலோசனை சபைக் கூட்டம் நேற்று பிற்பகல் 10 ஆவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்துக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து வெளியிட்டார்.
நில அளவை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும்.
தவறான கருத்துக்களைப் பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்- என்றார்.
இதேவேளை, இந்த அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
கொரோனா புதிய உருமாற்றம், சுகாதாரத் துறையின் ஆலோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.
புத்தபெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகளை ஆலோசனை சபைக்கு முன்வைத்தது.
எதிர்வரும் கூட்டத்தில் இதுதொடர்பில் மகா சங்கத்தினரின் கருத்துக்களை குழுவிடம் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.