மன்னாரில் கடும் மழை விடத்தல் தீவில் கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீர்-ரெலோ தலைவர் செல்வம் நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்

விடத்தல் தீவு மற்றும் தலைமன்னார் கிராமத்தினுள் சென்ற கடல் நீர் – மக்கள் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை பெய்த கடும் மழையை தொடர்ந்து கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (7) காலை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு,பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.

மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு,உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்.மேலும் தலைமன்னார் கிராம பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்.