மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று வியாழக்கிழமை ஒப்பமிட்டன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்படதலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர். அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.

அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாத் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் நேரில் சென்று சம்பந்தனிடம் கையொப்பம் பெற்றதைத் தொடர்ந்தே ஏனைய தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்றிரவு கொழும்பு வரும் மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) நாளை காலை அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.