2009 இல் நடந்தது இனப்படுகொலையே: ரெலோ மதுசுதன் கடும் காட்டம்

உலகம் முழுவதும் இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டில் இனப்படுகொலை புரிந்தது என்பதை வெளிப்படையாக கூறுவதற்குத் தயங்குகின்ற காலத்தில் தமிழினப் படுகொலையே நடந்தது என்பதைப் பல இடங்களிலும் அங்கீகரித்து வருகிறார்கள் என ரெலோ நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(11) சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே-18 அண்மித்துவிட்டது. எங்கள் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாள். இன்று மே-11. இந்தநாட்களில் முள்ளிவாய்க்காலிலும், வன்னிப் பெருநிலப்பரப்பிலும் எங்கள் உறவுகள் வகை தொகையாக கொன்றொழிக்கப்பட்டார்கள். இந்த மாதத்தில் நாங்கள் வழமையாக ஒன்றுகூடி நினைவு கூருவதுண்டு.

எனவே, மே-18 அன்று நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டத்தைக் கூட்டி நினைவஞ்சலியை நிகழ்த்துவதற்கு நான் பரிந்துரைக்கின்றேன்.

1915 ஆம் ஆண்டில் ஆர்மேனியப் படுகொலை இனப் படுகொலை என உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலைக்குப் பின்னர் இந்திராகாந்தி அம்மையால் இந்தியப் பாராளுமன்றத்தில் இனப் படுகொலை எனக் கூறப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டு சட்டசபையில் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். வடமாகாண சபையிலும் இது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர். அதேபோன்று கனடா நாட்டின் ஒரு உள்ளுராட்சி மன்றத்திலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர்.

எங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி அமைதியான முறையில் எங்கள் சபையில் மே-18 நாளை நாங்கள் நினைவு கூர வேண்டும் என்பதை இந்தச் சபையின் தாழ்மையான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். எனவே, மே-18 அன்று எங்கள் இனம் சார்பான கோரிக்கையாக விசேட கூட்டத்தை நினைவு அஞ்சலிக் கூட்டமாக கூட்ட வேண்டும் என அன்புடன் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவிக்கையில், மதுசுதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுத்த பின்னர் பதில் வழங்குகின்றேன் எனத் தெரிவித்தார்.